திருவள்ளூர் இரட்டை கொலை வழக்கு: 27 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
திருவள்ளூர்: அம்பேத்கார் சிலை அவமதிப்பு தொடர்பாக இருவரை கொலை செய்த வழக்கில் 27 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி திருவள்ளூர் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 12 ஆண்டுகாலம் நடைபெற்ற இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையை அடுத்த அரண்வாயல் கிராமத்தில் அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த சிலைக்கு கடந்த 2003ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மர்ம நபர்கள் சிலர் செருப்பு மாலை அணிவித்தனர். இதனால் அரண்வாயல் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கலவரம் ஏற்பட்டது. கலவரம் நடந்தபோது திருவூர் கிராமத்தைச் சேர்ந்த சுகுமாறன் 19, மகேஷ்,25 ஆகியோர் அங்குள்ள ஆற்றங்கரை பகுதியில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சுகுமாறன், மகேஷ் இருவரையும் கலவர கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் சுகுமாறன், மகேஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அரண்வாயல், கொப்பூர், திருவூர், அரண்வாயல்குப்பம், விடையூர் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த 28 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் கண்ணன் என்பவர் இறந்து போனார்.
இதையடுத்து 27 பேர் மீதான விசாரணை திருவள்ளூர் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சாட்சி விசாரணை முடிந்தது. இந்த வழக்கில் கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பு கூறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். அதேபோல் அரண்வாயல் கிராமத்தில் இருந்த அம்பேத்கர் சிலைக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேரும் மழை காரணமாக வர முடியவில்லை என கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. குற்றம்சாற்றப்பட்ட 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் 12 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.