ரூ.27 கோடியில் 27 விடுதிகளுக்கு சொந்தக் கட்டிடம் கட்ட ஜெயலலிதா உத்தரவு
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் தற்பொழுது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 1,300 ஆதிதிராவிடர் நல விடுதிகள், 42 பழங்குடியினர் விடுதிகள் என மொத்தம் 1,342 மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகள் இயங்கி வருகின்றன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குழந்தைகள் கல்வி கற்பதற்காக அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் பயனாக அதிக அளவில் மாணவ, மாணவியர் கல்வி கற்பதற்கு முன் வருவதாலும், இடைநிற்றல் கணிசமாக குறைந்துள்ளதாலும், மாணவ, மாணவியர் தங்கிப் பயிலுவதற்கு அதிக விடுதிகள் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான புதிய விடுதிகள் துவக்குவதற்கும், வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் விடுதிகளுக்குச் சொந்தக் கட்டடங்கள் கட்டுவதற்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், இந்த ஆண்டு வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் 54 விடுதிகளில், அரியலூர், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர், தூத்துக்குடி மாவட்டங்களில் மாவட்டத்திற்கு ஒன்றும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 விடுதிகள், சேலம் மாவட்டத்தில் 2 விடுதிகள், சிவகங்கை மாவட்டத்தில் 3 விடுதிகள்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2 விடுதிகள், திருநெல்வேலி மாவட்டத்தில் 2 விடுதிகள், விழுப்புரம் மாவட்டத்தில் 4 விடுதிகள் என மொத்தம் 27 விடுதிகளுக்குச் சொந்தக் கட்டடம் கட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடுதிகளில் 5 கிலோவாட் திறன் கொண்ட சூரிய மின் கலன் அமைப்பு நிறுவப்படும். இந்த 27 விடுதிகள் கட்ட, விடுதி ஒன்றுக்கு 1 கோடி ரூபாய் வீதம் 27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கை, ஆதிதிராவிட மாணவ, மாணவியர்கள் நல்ல கட்டமைப்பு வசதியுடன் கூடிய விடுதிகளில் தங்கிப் பயில வழிவகை ஏற்படுவதால் அவர்கள் கல்வியில் மேன்மை அடைய இயலும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.