27,00,000 பேர் போன் மூலமாக அம்மாவுக்கு ‘ஹேப்பி பர்த்டே’ சொன்னார்கள்- அதிமுக ஐ.டி பிரிவு!
சென்னை: தொலைபேசி வாயிலாக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சுமார் 27 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்த்துத் தெரிவித்திருப்பதாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்தப் பிறந்தநாளுக்கு தலைவர்கள் மட்டுமின்றி, சாதாரண மக்களும் முதல்வருக்கு வாழ்த்து சொல்வதற்கு வசதியாக புதிய ஏற்பாடுகளைச் செய்திருந்தது அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு.
அதன்படி, 7767020002 என்ற செல்போன் எண்ணும், 044-33124234 என்ற தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டது. இந்த எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
30 வினாடிக்குள்...
அவ்வாறு போன் செய்யும் மக்கள் 30 வினாடிக்குள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. ஒரு நிமிடத்தில் 6 ஆயிரம் பேர் வரை இந்த குறிப்பிட்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
22ம் தேதி முதல்...
குரு பகவான் சிம்ம ராசியிலும், கதிரவன் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் போது வரும் பவுர்ணமி தினத்தன்று மக நட்சத்திரத்திலும், ரிஷப லக்னத்திலும் கூடும் புண்ணிய நாள் 22.2.2016. இந்த நாளில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நட்சத்திரம் வந்ததால் அன்றைய தினம் காலை 6 மணி முதல் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கான எண்கள் செயல்பட தொடங்கின.
ஒரே நேரத்தில் 20,000 பேர்...
இந்நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் ஒரே நேரத்தில் 20 ஆயிரம் பேர் வாழ்த்து தெரிவிக்க தொடர்பு கொண்டுள்ளனர். இதனால் தங்களுடைய சாப்ட்வேரை மேம்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆஸ்பயர் கே.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுவாழ் தமிழர்களும்...
இந்த எண்கள் மூலமாக தமிழகம் மட்டுமின்றி சிங்கப்பூர், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மன் உள்பட பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களும் ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்தைப் பதிவு செய்துள்ளனர்.
27 லட்சம் பேர்...
நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, இந்த தொலைபேசி எண்கள் மூலம் 22 லட்சத்து 43 ஆயிரத்து 593 பேர் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்திருந்ததாகவும், இரவு 10 மணியளவில் வாழ்த்து தெரிவித்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்தை தாண்டியதாகவும் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தெரிவித்துள்ளது.