தேனி: குரங்கணிமலை காட்டுத் தீயில் சிக்கிய 27 பேர் மீட்பு
குரங்கணிமலை காட்டுத் தீயில் சிக்கிய 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
போடி: தேனி குரங்கணிமலை காட்டுத் தீயில் சிக்கியவர்களில் 27 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேனி அருகே குரங்கணிமலை பகுதியில் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூரை சேர்ந்த மாணவிகள், பெண்கள் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மலைப்பகுதியில் திடீரென காட்டுத் தீ பரவியது.
இதில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து தமிழக அரசு மத்திய அரசின் உதவியை நாடியது. பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவின் பேரில் விமானப்படையும் உதவிக்கு களத்தில் இறங்கியது.
கோவை சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிக்கு விரைந்தன. இந்நிலையில் குரங்கணிமலை தீ விபத்தில் சிக்கி 8 பேர் பலியாகி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் தீக்காயம் அடைந்தோர் டோலி மூலம் மலையில் இருந்து கீழே கொண்டுவரப்பட்டனர்.