இழுத்து மூட அனுமதி கேட்ட 28 தமிழக பொறியியல் கல்லூரிகள்!
தமிழகத்தில் இந்த ஆண்டு 28 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு 28 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட உள்ளதாகவும், அதனால் அவற்றில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என்றும் அகில இந்திய தொழில்நுட்பக்குழுவின் மண்டலத் தலைவர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் 562 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவற்றிற்கான மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். அதற்காக ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அகில இந்திய தொழில்நுட்பக்குழுவின் மண்டலத் தலைவர் பாலமுருகன் பேசுகையில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் 28 கல்லூரிகள் இந்த கல்வியாண்டு முதல் மூடுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன.
அதனால், அந்த 28 கல்லூரிகளிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறாது. ஆனால், 2 மற்றும் 3 ஆண்டுகளில் பயிலும் மாணவர்கள் வழக்கம்போல கல்லூரி நடக்கும். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இந்த ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வில் இந்த கல்லூரிகள் இடம்பெறாது என்று தெரிவித்துள்ளார்.
பொறியியல் படித்த பலர் வேலைவாய்ப்பின்றி இருப்பதாலும், அந்த படிப்பிற்கான ஆர்வம் மாணவர்களிடையே குறைந்து வருவதாலும் ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.