வாழவழியில்லை கருணைக் கொலை செய்யுங்கள்... 28 குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனுஅளித்த கொடுமை!
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் 28 குடும்பத்தை சேர்ந்தவர்கள் கருணைக்கொலை செய்துவிடும்படி மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் : திருவள்ளூரில் கருணைக்கொலை செய்யக்கோரி 28 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மனு அளித்துள்ளனர். வாழ வழியில்லை என்றும், தங்களை கருணைக்கொலை செய்திடுமாறும் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்து உள்ள வல்லம்பேடு குப்பம் என்ற மீனவ கிராமத்தில் சுமார் 140 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தகிராமத்தில் தற்போது கிராம கட்டுப்பாட்டு தலைவராக இருக்கும் எல்லப்பனுக்கும், இதற்கு முன்பு அந்த பொறுப்பில் இருந்த சத்திரத்தான் என்பவருக்கு மோதல் இருந்து வந்ததாக தெரிகிறது.
கோயில் நிதி முறைகேடு தொடர்பாக இருபிரிவினரிடையே மோதல் முற்றி கடந்த 2016ம் ஆண்டில் 2 பேர் கொலை செய்யப்பட்டதால் வல்லம்பேட்டில் பதற்றம் நிலவியது. தொடர்ந்து 2 ஆண்டுகளைக் கடந்தும் கோஷ்டி மோதல் தொடரும் நிலையில் ஒரு பிரிவினரை ஊருக்குள்ள செல்ல அனுமதிக்காமல் எதிர் பிரிவினர் பிரச்னை செய்வதாக தெரிகிறது.
மீன்பிடி தொழில் செய்து வரும் தாங்கள் எத்தனை நாட்கள் ஊருக்குள் செல்லாமல் நாட்களை கடத்துவது என்று பாதிக்கப்பட்ட மற்றொரு பிரிவினர் கேட்கின்றனர். இந்நிலையில் கருணைக்கொலை செய்யக்கோரி 28 குடும்பங்களை சேர்ந்தவர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். வாழ வழியில்லை என்றும், தங்களை கருணைக்கொலை செய்திடுமாறும் ஆட்சியர் சுந்தரவல்லியிடம் அவர்கள் மனு அளித்துள்ளனர்.