சென்னை கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 29 சிறுவர்கள் செங்கல்பட்டுக்கு மாற்றம்
சென்னை: சென்னை கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 29 சிறுவர்கள் செங்கல்பட்டு இல்லத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை புரசைவாக்கம் பகுதியில் அரசினர் கூர்நோக்கு இல்லம் என்ற சிறுவர் சீர்திருத்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 18 வயதுக்குக் கீழ் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு இங்கு அடைக்கப்படுகின்றனர்.
75-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இந்த இல்லத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். ஒரு தரப்பினரை முதல் தளத்திலும், மற்றொரு தரப்பினரை 2-வது தளத்திலும் தங்க வைத்தனர்.
இந்நிலையில் நேற்று காலை உணவு சாப்பிடும் போது மீண்டும் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கையில் கிடைத்த டியூப் லைட், கற்கள், கட்டை உள்ளிட்ட பொருட்களை கொண்டு சரமாரியாக தாக்கிக் கொண்டனர். பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள், காப்பாளர்கள், கண்காணிப்பாளர் முயற்சி மோதலை தடுக்க முயற்சி செய்யவில்லை.
தொடர்ந்து சிறுவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். சிறுவர்களின் தாக்குதல் சம்பவத்தால் கூர்நோக்கு இல்லத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட 33 சிறுவர்கள் பின்பக்கமாக சென்று 8 அடி உயரம் உள்ள சுவரை ஏறி குதித்து தப்பிச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி நேற்று இரவு வரை 29 சிறுவர்களை பிடித்தனர். தப்பி ஓடிய சிறுவர்களை பிடிக்க முயன்ற போது 3 சிறுவர்கள் உடைந்த டியூப் லைட், பிளேடுகளால் தங்களுடைய கை, கழுத்து பகுதியை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தனர்.
இதனிடையே இன்று காலை மற்றொரு சிறுவனையும் போலீசார் கண்டுபிடித்தனர். தற்போது பிடிபட்ட 29 சிறுவர்களும் இன்று செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்துக்கு மாற்றப்பட்டனர். எஞ்சிய 3 பேரை தேடும் நடவடிக்கை தொடர்கிறது.