ரூ.2 கோடி பரிசளித்த முதல்வரை நேரில் சந்திக்க விரும்பும் மாரியப்பன் தங்கவேலு
சென்னை : பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்றுள்ள மாரியப்பன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, அவரிடம் வாழ்த்து பெறுவதை விருப்பமாகக் கொண்டுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
31வது ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சனிக்கிழமை காலை நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார். தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்திருக்கும் மாரியப்பனுக்கு ரூ2 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தம்முடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புக்கு மாரியப்பனின் பெற்றோர் தங்கவேலு-சரோஜா நன்றி தெரிவித்துள்ளனர். பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை பெற்ற எங்களது மகனுக்கு நல்ல வாய்ப்பும், புகழும் கிடைத் துள்ளது.
மாரியப்பன் தமிழகம் திரும்பியதும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற வேண்டும் என்பதையே விருப்பமாக தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் தமிழக முதல்வரை சந்திக்க வேண்டி அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
எப்பொழுதுமே விளையாட்டுத் துறை மீது தனி அக்கறை செலுத்தும் தமிழக முதல்வர், எங்களது மகன் தங்கப் பதக்கம் வென்றதும், உடனடியாக ரூ.2 கோடி பரிசளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக, நாங்கள் முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தங்கப் பதக்கத்துடன் மாரியப்பன் தாயகம் திரும்பும் போது, ஒரு சில நிமிடங்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்பளித்தால், அதனை பெருமையாக கருதுவோம்.
விளையாட்டுத்துறை வளர்ச்சியில் பெரிதும் அக்கறையும், முக்கியத்துவமும் அளிக்கும் தமிழக முதல்வர், மாரியப்பன் சந்தித்து வாழ்த்து பெற ஒரு வாய்ப்பை அளிப்பார் என நம்புகிறோம்.
எங்கள் மகன் தங்கம் வெல்ல காரணமாக இருந்த பாராலிம்பிக் வாலிபால் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா தலைவர் சந்திரசேகர், பயிற்சியாளர் சத்யநாராயணன் மற்றும் பள்ளி, கல்லூரி உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் தொடர்ந்து ஊக்கமளித்த கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி ஆகியோருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என்று மாரியப்பனின் பெற்றோர் கூறியுள்ளனர்.