'செஞ்சோற்றுக் கடன் தீர்க்க..' சாதிக் பாட்சாவின் நினைவஞ்சலி போஸ்டர் சொல்வதென்ன?
சென்னை: செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா... என்று மகாபாரதத்தில் குருச்சேத்திர போர்க்களத்தில் கர்ணணைப் பார்த்து கேட்பார் கண்ணன். இந்த வார்த்தையை இப்போது சாதிக் பாட்சாவின் நினைவஞ்சலி போஸ்டரில் போட்டு விளம்பரம் செய்துள்ளனர் அவரது குடும்பத்தினர். இதனால் 2 ஜி வழக்கும் சாதிக் பாட்சாவின் மரணமும் மீண்டும் பரபரப்படைந்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரும்,2011ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டவருமான பெரம்பலூர் ஏ.எம்.சாதிக் பாட்ஷாவின் மரணம் குறித்து சி.பி.ஐ மறுவிசாரணை செய்ய வேண்டுமென அதிமுகவும் கோரிக்கை வைத்துள்ளது.
ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரான பெரம்பலூர் ஏ.எம்.சாதிக் பாட்ஷாவின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி 16ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளும், வார இதழ்களில் கொடுக்கப்பட்டிருந்த விளம்பரங்களும் திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளன.
சாதிக் பாட்சா
பெரம்பலூர் மாவட்டடத்தைச் சேர்ந்தவரான சாதிக் பாட்ஷா திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய தொலைத் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவின் நெருங்கிய நண்பர். சென்னையில் ‘கிரீன் ப்ரோமொட்டர்ஸ்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.
சிபிஐ விசாரணை
நாட்டையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டபோது, சாதிக் பாட்ஷாவும் சிபிஐ விசாரணைக்கு உள்ளானார்.
சாதிக் பாட்சா தற்கொலை
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இந்நிலையில், 2011 மார்ச் 16ல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் தூக்குபோட்டுக் கொண்டு உயிரிழந்த சாதிக்பாட்ஷாவின் சடலம் மீட்கப்பட்டது. இதுவரை அவரது மர்ம மரணத்துக்கு விடை கண்டு பிடிக்க முடியவில்லை.
நினைவு தினம் அஞ்சலி
ஆண்டுதோறும் சாதிக்பாட்ஷா வின் நினைவு நாளில், அவரது குடும்பத்தாரும், நண்பர்களும் சேர்ந்து நலத்திட்ட உதவிகளை ஆர்ப்பாட்டமின்றி வழங்குவது வழக்கம். அவரது 5-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி நேற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
போஸ்டர்கள்
நினைவு நாளை முன்னிட்டு பெரம்பலூரில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் காணப்பட்ட வாசகங்கள், திமுக வினருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தன. அதேபோல பிரபல வார இதழ்களிலும் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
விளம்பர வாசகங்கள்
அதில் ‘இழைத்திடாப் பிழைக்காக இன்னுயிரை ஈந்தாயே', ‘செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயே' என்றெல்லாம் அவற்றில் குறிப்பிடப்பட்டிருந்தன. இதுதான் இப்போது பரபரப்புக்கு காரணமாக உள்ளது.
திமுக மீது குற்றச்சாட்டு
பாட்சாவின் மைத்துனர் ஆஷிக் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பாஷாவின் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் அரசியல்வாதிகள் வைத்திருந்த தொடர்பே அவரது வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து என்றும், பாஷா கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கூடா நட்பு
இதுகுறித்து பெரம்பலூரில் சாதிக்பாட்ஷாவின் நண்பர்கள் கூறும்போது, "ஆ.ராசா போன்ற பெரிய இடத்து நட்பு, அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. அவரது இழப்பை தாங்கமுடியாத நிலையில்தான், கடந்த சட்டசபைத் தேர்தலின்போது, திமுகவுக்கு எதிராக வாக்களிக்கும்படி முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் பிரச்சாரம் நடைபெற்றது.
திமுகவினர் குழப்பம்
தற்போது, அவரது பெயரில் அறக்கட்டளை உருவாக்கி, அவரது நினைவு நாளில் ஆ.ராசா மற்றும் திமுக மீது மறைமுகமாக பழி சுமத்தும் வகையில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன. இது, திமுகவினரிடையே பெரும் மனக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலில் எதிரொலிக்கும்
ஏனெனில், இப்பகுதியில் வெற்றி வாய்ப்பை தீர்மானிப்பதில் முஸ்லிம்களின் வாக்குகளுக்கு முக்கியப் பங்கு உண்டு என்று கூறியுள்ளனர். சட்டசபைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த பிரச்சினை திமுகவை கடுமையாக பாதிக்கும் என்று தெரிகிறது.
சி.ஆர். சரஸ்வதி
திமுக-காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பொழுது அச்சத்தின் காரணமாக பேசாமல் இருந்த பாட்சா குடும்பத்தினர் தற்போது தைரியம் பெற்றுள்ளனர். அந்த குறிப்பிட்ட விளம்பரத்தில் இடம் பெற்றிருக்கும் வாசகங்களே இதற்கு போதுமான சாட்சி என்று அதிமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.
நமது எம்ஜிஆர் கவிதை
இதே சமயத்தில் அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான ‘நமது எம்ஜிஆரில்' பாஷாவின் மரணத்திற்கு அவரது குடும்பத்தினர் திமுகவைத்தான் குற்றம் சாட்டுகின்றனர் என்னும் பொருள்பட கவிதை ஒன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.