வங்கிகளுக்கு 2 மற்றும் 4-ஆவது சனிக்கிழமைகள் விடுமுறை... நாளை முதல் அமல்
சென்னை : நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு 2 மற்றும் 4-ஆவது சனிக்கிழமைகளில் விடுமுறை விடப்படும் நடைமுறை செப்டம்பர் 12-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் அமலாகிறது.
இந்திய வங்கிகள் நிர்வாகிகள் அமைப்பும், வங்கிகளின் தொழிற்சங்க நிர்வாகிகளும் செய்து கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில், அனைத்து வங்கிகளுக்கும் 2-ஆவது மற்றும் 4-ஆவது சனிக்கிழமைகளில் விடுமுறையை மாற்று முறை ஆவணங்கள் சட்டம் 1881-இன் அடிப்படையில் செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்துமாறு மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இந்த மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று (செப்டம்பர் 12) வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும். இதேபோன்று 4-ஆவது சனிக்கிழமையன்று (செப்டம்பர் 26) வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும்.
இவ்வாறு 2, 4-ஆவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு பொது விடுமுறை விடப்படுவதால், அனைத்து வங்கிகளும் மற்ற சனிக்கிழமைகளில் தங்களது வார நாள்களின் வேலைநேரத்தில் முழுமையாகச் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் வழக்கம் போல் அனைத்து அரசு விடுமுறைகள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் வங்கிகள் செயல்படாது.