குட்கா, பான் மசாலா தயாரிப்பாளர்கள் வீட்டில் 2வது நாளாக ஐடி ரெய்டு
சென்னை: குட்கா, பான் மசாலா தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். குட்கா, பான் மசாலா கிடங்குகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். வருமான வரி ஏய்ப்பு புகாரில் தமிழகம் மற்றும் ஆந்திராவில் 2வது நாளாக சோதனை நடத்தப்பட்டது. சீனிவாசராவ், மாதவராவ், உமாராவ் ஆகியோர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. கிடங்குகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல நூறு டன் புகையிலைப் பொருட்கள் பதுக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் பான்மசாலா, குட்கா, புகையிலை போன்ற பொருட்கள் தமிழகத்தில் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், அதிகாரிகள் துணையுடன் பெரிய அளவில் இந்த பொருட்கள் தயாரிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
பள்ளிகளுக்கு அருகில் போதைப்பொருள் சாக்லேட்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, தமிழகம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பான் மசாலா, குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களுக்கும் இந்த பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருவது அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெரும்பாலான மாநிலங்களில் இந்த பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், தடையை மீறி தயாரிக்கப்பட்டு வருவதால், அரசுக்கு கணக்கு காட்டாமல் முறைகேடான முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.
இதுபோன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனை செய்யும் நிறுவனங்கள், இடைத்தரகர்கள், அதிகாரிகள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதாகவும், அனுமதிக்கப்பட்ட மாநிலங்களிலும் பல கோடி வியாபாரத்தை கணக்கு காட்டாமல் மறைப்பதாகவும் வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தமிழகம், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மொத்தம் 30 இடங்களில் உள்ள பான், குட்கா தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர் வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அந்தப் பகுதியில் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைக்க ஏராளமான குடோன்களும் உள்ளன. அவற்றிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை செய்யப்படும் நிறுவனங்கள், இடைத்தரகர்களின் வீடு, அலுவலகம், குடோன்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டன.
இந்தச் சோதனையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள், பல கோடி ரூபாய் கருப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று மாலையில் சோதனை முடிந்த பிறகு முழு தகவல்களையும் வெளியிடுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே வருமான வரி ஏய்ப்பு புகாரில் தமிழகம் மற்றும் ஆந்திராவில் 2வது நாளாக சோதனை நடத்தப்பட்டது. சீனிவாசராவ், மாதவராவ், உமாராவ் ஆகியோர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. கிடங்குகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல நூறு டன் புகையிலைப் பொருட்கள் பதுக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.