நாங்குநேரியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை ப்ளான் பண்ணி போட்டுத் தள்ளிய 2-வது மனைவி கைது
நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே விவசாயி கொலை வழக்கில் 2-வது மனைவி அவரது கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் பரப்பாடி அருகே உள்ள கல்மாணிக்கம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தங்கராஜ் (60). இவருக்கு முதல் மனைவி மூலம் 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ராமகனியை(36) தங்கராஜ் 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர் மூலம் முத்து சினேகா (14) என்ற மகள் உள்ளார்.
நாங்குநேரி அருகே பொத்தையடி மாங்குளத்தில் உள்ள ஒரு தோட்டத்தை தங்கராஜ் குத்தகைக்கு எடுத்து அதில் வாழை விவசாயம் செய்து வந்தார். அந்த தோட்டப்பகுதியில் உள்ள ஒரு அறையில் மனைவி, மகளுடன் வசித்து வந்தார். 2 நாட்களுக்கு முன்பு அறையின் வெளியில், கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த தங்கராஜ், மர்ம நபர்களால் இரும்பு கம்பி, கம்பால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
மனைவி புகார்
இந்தச் சம்பவம் தொடர்பாக ராமகனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் அங்கு விசாரணை மேற்கொண்டனர். ராமகனியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, நானும் எனது மகளும், அறையில் தூக்கிக்கொண்டிருந்தோம். இரவில் நாய் குறைக்கும் சத்தம் கேட்டதையடுத்து, நான் வெளியே பார்தேன். அப்போது எனது கணவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் என்று கதறி அழுதுள்ளார்.
முதல் மனைவின்
தங்கராஜின் முதல் மனைவியின் மகன்கள், உறவினர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். தாய் இறந்த சில மாதங்களிலேயே தந்தை தங்களை பிரிந்து சென்று விட்டதாகவும், உறவினர்கள் பாதுகாப்பில் தாங்கள் வளர்ந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அதிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
கள்ளத் தொடர்பு
இந்நிலையில், நேற்று ராமகனியை அழைத்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது அவர் கூறிய பதில்கள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. விசாரணையில், ராமகனிக்கும் அவரது தங்கை கணவர் அன்பழகனுக்கும்(36) இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்தது தெரிய வந்தது.
வாக்குமூலம்
இது குறித்து ராமகனி போலீஸாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் கூறியதாவது: திருமணத்தின்போது எனது கணவருக்கும், எனக்கும் அதிக வயது வித்தியாசம் இருந்தது. ஆரம்பத்தில் எங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது.
கடந்த ஓராண்டுக்கு முன்பு எனது தங்கை உத்திரக்கனியின் கணவர் அன்பழகனும், நானும் தனியாக சந்தித்து பேசினோம். அப்போது முதல் எங்கள் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது.
தங்கை கணவருடன் தகாத உறவு
டிரைலர் லாரி டிரைவராக இருந்த அவர் என்னுடன் போனில் பேசுவதோடு, அடிக்கடி வெளியூரில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு என்னுடன் வந்து உல்லாசமாக இருப்பார். நானும், தங்கை வீட்டுக் செல்வதாக எனது கணவரிடம் கூறி விட்டு சென்று விடுவேன். நாங்கள் இருவரும் அடிக்கடி வெளியிடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தோம்.
மாட்டிக்கொண்டோம்
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, வெளியூரில் வேலைக்குச் சென்றிருப்பதாக தங்கையிடம் கூறிவிட்டு அன்பழகன், எங்கள் தோட்டத்தில் வந்து தங்கினார். பக்கத்தில் டிரைலர் லாரி ஓட்டி வருவதாகக் எனது கணவரையும் கூறி நம்ப வைத்து அவர் எங்களுடன் இருந்தார். ஒருவாரம் அவர் எங்களுடன் தங்கியிருந்தார், அப்போது அன்பழகனும், நானும் பலமுறை உல்லாசமாக இருந்தோம். இது எனது கணவருக்கு தெரிய வரவே, அன்பழகனை கண்டித்து அனுப்விட்டார். என்னையும் கண்டித்தார்.
கொலை செய்யத் திட்டம்
இதனால், எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. என்னால் அன்பழகனை பிரிந்து இருக்க முடியவில்லை. இதையடுத்து தங்கராஜை கொலை செய்ய திட்டமிட்டோம். எங்கள் கொலை திட்டத்துக்கு தூத்துக்குடி உள்ள எனது அக்காவின் மகன் ராமுவையும்(22) துணைக்கு அழைத்து, கணவர் என்னை கொடுமை படுத்துவதாக ராமுவிடம் கூறினேன்.
பிளான்
சம்பவம் நடத்தபோது, நானும் எனது மகளும் அறையின் உள்ளே இருந்தோம். எனது கணவரை கதவை வெளியே தாழிட கூறிவிட்டேன். அதன் பின்னர் அன்பழகனுக்கு போன் செய்து, நாங்கள் போட்ட பிளான் படி வெளியே படுத்திருந்த எனது கணவரை கொலை செய்துவிட்டோம் என்று கூறினார்.
3-பேர் கைது
இதை தொடர்ந்து, தலைமறைவாகி இருந்த கள்ளக் காதலன் அன்பழகன், ராமு ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமும் வாக்குமூலம் பெற்றனர். கைதான அன்பழகனுக்கு 6 மற்றும் 5 வயதுகளில் 2 மகன்கள் உள்ளனர். கூலித் தொழிலாளியான ராமுவுக்கு திருமணம் ஆகவில்லை. ராமகனியின் மகள் முத்து சினேகாவை காப்பகத்திற்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை 2-வது மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3-பேர் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி படுகொலை செய்த சம்பவம் நாங்குநேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.