இமானுவேல்சேகரன் குருபூஜை விழா... பரமக்குடியில் 3 ஆயிரம் போலீசார் குவிப்பு.. இன்று உள்ளூர் விடுமுறை
பரமக்குடி : இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழவை முன்னிட்டு அங்கு 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
பரமக்குடி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே இமானுவேல்சேகரன் நினைவிடம் அமைந்துள்ளது. அவரது 58-வது குருபூஜை விழா இன்று (வெள்ளிக் கிழமை) நடைபெறுகிறது.
இதில் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், சமுதாய தலைவர்கள் பங்கேற்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
அஞ்சலி செலுத்த வருவோருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், சட்டம் -ஒழுங்கை பாதுகாக்கவும் பரமக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பரமக்குடி நகரில் நினைவிடம் செல்லும் 5 முனை சந்திப்பு, ஆர்ச் பகுதி மற்றும் சந்தைக்கடை தெரு ஆகிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அபய்குமார்சிங், டி.ஐ.ஜி. ஆனந்தகுமார் சோமானி ஆகியோர் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருவோரின் வழித்தடம், பதற்றமான இடங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
பதற்றம் நிறைந்த பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஒன்றியங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.