தமிழக ரயில் பாதை திட்டங்களுக்கு 3,940 கோடி ஒதுக்கீடு.. பொன். ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
தமிழக ரயில் பாதை திட்டங்களுக்கு 3,940 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
டெல்லி: தமிழகத்தில் ரயில்பாதை மேம்பாட்டுக்கு மொத்தம் ரூ. 3,940 கோடிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
மதுரை-வாஞ்சிமணியாச்சி இரட்டை ரயில்பாதைக்கு ரூ. 1,872 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரயில்பாதை மேம்பாட்டுக்கு மொத்தம் ரூ. 3,940 கோடிக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 348 கி.மீ. தூரத்துக்கு புதிய சாலைகள் அமைக்கப்படும்.
ரயில் போக்குவரத்தை மேம்படுத்த புதிய ரயில் பாதைகள் உதவும். சென்னை கன்னியாகுமரிக்கு 4 வழிச் சாலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிரண்டு மாதங்களில் இப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்படும்,
சென்னையிலிருந்து பாண்டிச்சேரி வரை நீர் வழிப் போக்குவரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதெல்லாம் வந்துவிட்டால், சாலை வழியாகவும், ரயில் வழியாகவும், நீர் வழியாகவும் சென்னை முதல் கன்னியாகுமரி வரையுள்ள அனைத்துப் பகுதிகளும் முழுமையாக இணைக்கப்படும்.