தீரன் பட பாணியில் கோவையில் பெண்ணை கொன்ற மேற்கு வங்க கொள்ளையர்கள் கைது
கோவை அருகே தோட்டத்தில் தங்கியிருந்த பெண்ணை கொன்று விட்டு, கணவர் மீது மின்சாரம் பாய்ச்சி விட்டு நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வட மாநில கொள்ளையர்களை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Recommended Video
கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே தோட்டத்தில் தங்கியிருந்த பெண்ணை கொன்று விட்டு, கணவர் மீது மின்சாரம் பாய்ச்சி விட்டு நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மேற்கு வங்க மாநில கொள்ளையர்கள் மூவரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கணுவாக்கரை ஊஞ்சல் குட்டை தோட்டத்தை சேர்ந்தவர் மயில்சாமி, இவரது மனைவி ராஜாமணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகள் கோவையில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகள் படித்து வருகிறார்.
தம்பதியர் இருவரும் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இவர்கள் புதிதாக வீடு கட்டி வருகிறார்கள். இதற்கு டைல்ஸ் ஒட்டும் பணியில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 3 பேர் பணியாற்றி வந்தனர்.
கொடூர கொலை
தொழிலாளர்கள் 3 பேரும் தோட்டத்து வீட்டிலேயே தங்கி வேலை செய்தனர். அவர்கள் மூன்று பேருக்கும் ராஜாமணி சமைத்து போட்டார். கடந்த வாரம் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் திடீரென ராஜாமணியை கொன்று விட்டு மயில்சாமி மீது மின்சாரத்தை பாய்ச்சி கொல்ல முயற்சி செய்தனர். சத்தம் போடவே 8 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர்.
தேடுதல் வேட்டை
கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை விசாரணையில் கொலையாளிகள் குறித்து அடையாளம் தெரிந்தது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த சாம்ராட்,25, அஜய்,18, பிந்து, 25 என்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் பெண்ணை கொன்று நகை,பணத்தை கொள்ளையடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றது தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்த செல்போன் எண்ணை வைத்து விசாரித்த போது அவர்கள் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் செல்போன் சிக்னல் காட்டியது.
மேற்கு வங்கம் விரைவு
கோவையில் இருந்து, ரயிலில் வடமாநிலத்துக்கு தப்பிச் சென்றபோது, துலுக்கம்பாளையம் பகுதியில் செல்போனை வீசிச் சென்றிருக்கலாம் எனக் கருதிய போலீசார், ரயில்வே டிராக்கின் இருபுறமும் செல்போனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். கொள்ளையர்கள் மேற்கு வங்கத்திற்கு சென்றிருக்கலாம் என்று அங்கும் தனிப்படை போலீசார் தேடிச் சென்றனர்.
3 கொள்ளையர்கள் கைது
இதனிடையே மேற்கு வங்கத்தில் பதுங்கியிருந்த 3 கொள்ளையர்களை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். அவர்கள் மூவருக்கும் வேறு கொலை, கொள்ளையில் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.