பழ. கருப்பையா வீட்டின் மீது கல்வீச்சு: 3 பேர் கைது!
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பழ. கருப்பையா எம்.எல்.ஏவின் வீடு மீது நள்ளிரவில் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மூவரும் ராயப்பேட்டையை சேர்ந்தவர்கள். அதிமுக தலைமையை விமர்ச்சித்த காரணத்தால் தாக்குதல் நடத்தியதாக அவர்கள் கூறியுள்ளனர்.
துறைமுகம் சட்டசபைத் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த பழ.கருப்பையா, துக்ளக் ஆண்டு விழாவில் கட்சியையும் அமைச்சர்களையும் விமர்சித்து பேசினார். வார இதழுக்கு அளித்த பேட்டியிலும் அதே குற்றச்சாட்டை கூறியிருந்தார். இதையடுத்து கடந்த புதன்கிழமை அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து, வியாழக்கிழமை தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்த பழ.கருப்பையா மேலும் பல புகார்களை அடுக்கினார். கமிஷன், லஞ்ச ஊழல் என்று அமைச்சர்கள் மீதும், அதிமுக கவுன்சிலர்கள் மீது குற்றம் சாட்டினார். இதன் பின்னரும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வரும் அவர் தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சி பற்றி பல்வேறு விமர்சனங்களை கூறி வருகிறார்.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள பழ.கருப்பையாவின் வீட்டின் மீது ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் சிலர் நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளனர். வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கார் மீது மர்ம நபர்கள் கற்களை வீசியெறிந்து சேதப்படுத்தினர். தாக்குதலிலிருந்து தப்பிக்க வீட்டின் வாசலில் இருந்த தனது மகன், விளக்குகளை அணைத்துவிட்டு, கதவை தாழிட்டதாகவும், இதனையடுத்து கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
பழ.கருப்பையாவின் புகாரின் பேரில் போலீஷார் விசாரணை நடத்தினர். பழ.கருப்பையா வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டபோது அதனை அங்கிருந்த ஒருவர் பார்த்துள்ளார். அவர் ஆட்டோ நம்பரையும் குறித்து வைத்துக் கொண்டார். சம்பவம் பற்றி பழ.கருப்பையா வீட்டில் விசாரணை நடத்திய போலீசாரிடம் அந்த ஆட்டோ நம்பர் வழங்கப்பட்டது. இதை வைத்து போலீசார் துப்பு துலக்கி ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், ராமு, அருள் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இதற்கிடையே பழ. கருப்பையாவிடம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். கம்யூனிஸ்டு தலைவர்கள் நேரில் சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் நடந்த சம்பவம் பற்றி கேட்டு அறிந்தனர். இச்சம்பவத்துக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், தி.க. தலைவர் கி.வீரமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.