திருப்பூரில் பெண்ணுடன் கள்ளக்காதல் - இளைஞரை வெட்டிக்கொன்ற கணவர், அண்ணன் கைது
அடுத்தவன் மனைவியுடன் முறைகேடான உறவில் ஈடுபட்ட இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டி கொன்றுள்ளது ஒரு கும்பல். திருப்பூரில் நிகழ்ந்த இந்த கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
திருப்பூர்: திருப்பூரில் கள்ளத்தொடர்பு காரணமாக காதலியின் கண் முன்னே இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் குளித்தலையைச் சேர்ந்த பெண்ணின் கணவரையும், சகோதரரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவசக்தி நகரில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கழுத்தில் முன்னும் பின்னும் கொடூரமாக வெட்டப்பட்டுக் கிடந்த இளைஞரின் உடலை திருப்பூர் மத்திய போலீசார் கைப்பற்றினர். அந்த சடலத்தின் சட்டைப்பையில் இருந்த செல்போனை ஆராய்ந்ததில், கொல்லப்பட்டது குளித்தலையைச் சேர்ந்த லோகநாதன் என்பது தெரியவந்தது.
திருப்பூரில் வேலை செய்து வரும் அண்ணன் நாகராஜின் வீட்டுக்கு வந்தபோது அவர் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. நாகராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரியவந்தன.
குளித்தலையைச் சேர்ந்தவர் முருகன் அவரது மனைவி நளினி. இவர்களின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் லோகநாதன். நளினிக்கும் லோகநாதனுக்கும் இடையே தவறான தொடர்பு ஏற்படவே, இதையறிந்த முருகன், இருவரையும் கண்டித்துள்ளார்.
இதனையடுத்து நளினியும், லோகநாதனும் ஒரு வாரத்துக்கு முன் வீட்டை விட்டு வெளியேறினர். கிருஷ்ணகிரி சென்ற அவர்கள் வெள்ளிக்கிழமையன்று திருப்பூரில் உள்ள தனது அண்ணன் நாகராஜ் வீட்டுக்கு வந்தனர்.
இதனையறிந்த முருகன் லோகநாதனுடன் செல்போனில் பேசினார். நளினியுடன் சேர்த்து வைப்பதாகவும், திருமணம் செய்து வைப்பதாகவும் கூறவே, இதை நம்பிய இருவரும் திருப்பூரில் இருக்கும் இடத்தை கூறியுள்ளனர்.
அங்கு சென்ற முருகனை சந்திக்க நளினியுடன் வந்த லோகநாதனை, முருகனும், நளினியின் சகோதரர் பெருமாளும் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர்.
கொலை செய்ய முயன்றதை அறிந்த லோகநாதன், தப்பி ஓடினார். விடாமல் விரட்டிய முருகன், தனது மனைவி நளினியின் கண் முன்னே அவரது காதலனை வெட்டி வீழ்த்தினர். ரத்த வெள்ளத்தில் துடித்த லோகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சடலத்தை கைப்பற்றி போலீசார் செல்போன் மூலம் நாகராஜை தொடர்பு கொண்டு அழைத்து அடையாளம் காட்டுமாறு கூறினார்.
கொலைக்கான காரணத்தை விசாரணையில் தெரிந்து கொண்ட போலீசார், குளித்தலைக்கு சென்று
நளினி, முருகன், நளினியின் தம்பி பெருமாள் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில் லோகநாதனை கொன்றதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
அவர்களது வாக்குமூலத்தின்படி,முருகன், பெருமாளை கைது செய்த போலீசார், நளினியை சாட்சியாக வழக்கில் சேர்த்துள்ளனர். முறைகேடான தொடர்பினால் உயிரை பறிகொடுத்துள்ளார். திருப்பூர் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் கள்ளக்காதலும், கொலைகளும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.