கோகுல்ராஜ் கொலை: யுவராஜின் நண்பர்கள் 3 பேர் கைது – மனைவியிடம் செல்போன் பறிமுதல்
நாமக்கல்: கோகுல்ராஜ் வழக்கில் தலைமறைவாக உள்ள யுவராஜின் நண்பர்கள் பிரபு, சுரேஷ், கிரிதரன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். யுவராஜுக்கு அடைக்கலம் கொடுத்தாகவும், அவரது ஆடியோவை வாட்ஸ் அப்பில் பரப்பியதாகவும் பிரபு உள்ளிட்டோர் மீது புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்த சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட முதல் குற்றவாளியான சங்ககிரியைச் சேர்ந்த தீரன்சின்னமலை கவுண்டர் பேரவைத் தலைவர் யுவராஜ், கடந்த 100 நாள்களுக்கு மேல் தலைமறைவாக உள்ளார். இந்த வழக்கில் ஏற்கெனவே 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 5 பேர் தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளனர். அவர்கள் தினமும் நாமக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர்.
சிபிசிஐடி விசாரணை
இந்த வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதால், விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கோடு, கோகுல்ராஜ் கொலை வழக்கும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, தலைமறைவாக உள்ள யுவராஜ், அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். அதில், தன்னை என்கவுன்டர் செய்ய முயற்சி நடக்கிறது எனக் கூறியிருந்தார்.
தேடுதல் வேட்டை
100 நாள்களாக தலைமறைவாக உள்ள யுவராஜ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தது, சிபிசிஐடி போலீஸாருக்கு அதிர்ச்சியளித்தது. இதனால், அவரைப் பிடிக்க சிபிசிஐடி போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஏடி.எஸ்.பி. ஸ்டாலின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டுள்ள 3 தனிப்படையினர் சேலம், கோவை மாவட்டங்களில் முகாமிட்டு, தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
3 பேர் கைது
இந் நிலையில், யுவராஜுக்கு சங்ககிரியைச் சேர்ந்த அவரது நண்பர்கள் சிலர் கடந்த வாரம் வரை அடைக்கலம் கொடுத்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, சங்ககிரியைச் சேர்ந்த பிரபு, சுரேஷ், கிரிராஜன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதில் பிரபு என்பவர் மாயமாகிவிட்டதாக வியாழக்கிழமை இரவு அவரது மனைவி புகார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைதுக்கு காரணம்
யுவராஜ் அடிக்கடி சங்ககிரி பகுதிக்கு வந்து சென்றதும், அப்போது பிரபு, சுரேஷ், கிரிராஜன் 3 பேரும் அடைக்கலம் அளித்ததும் தெரியவந்தது. அதன் பேரில், 3 பேரையும் கைது செய்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். பின்னர், 3 பேரையும் நாமக்கல் குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி எஸ்.மலர்மதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
வீடுகளில் சோதனை
தலைமறைவாக உள்ள யுவராஜை பிடிக்க 3 தனிப்படை அமைத்து சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர். யுவராஜுக்கு நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை சிபிசிஐடி ஏடிஎஸ்பி ஸ்டாலின், டிஎஸ்பி வேலன் தலைமையிலான போலீஸார் சங்ககிரியை அடுத்த ஆவாரம்பாளையத்தில் உள்ள யுவராஜின் மாமியார் பாப்பா வீட்டில் சோதனை செய்தனர்.
செல்போன் பறிமுதல்
அதேபோல சிபிசிஐடி காவல் ஆய்வாளர் பிருந்தா தலைமையிலான போலீசார் சங்ககிரி கெமிக்கல் பிரிவு பகுதியில் உள்ள யுவராஜின் மனைவி சுவீதா வீட்டிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வீட்டில் உள்ள அனைத்து அறைகள், பீரோ, மேஜை டிராயர்உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். சுவீதாவின் செல்போனை போலீஸார் பறிமுதல் செய்து கொண்டனர்.
ஆதாரங்களை தேடிய போலீஸ்
இதுதவிர சங்ககிரியை அடுத்த கரும்பாலிக்காடு பகுதியில் உள்ள யுவராஜின் பெற்றோர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. யுவராஜ் வீட்டில் ஆயுதங்கள் உள்ளதா, அவர் பதுங்கி இருக்கும் இடம் குறித்து ஆவணங்கள் உள்ளதா, கோகுல்ராஜ் கொலை வழக்கு சம்பந்தமாக ஆதாரங்கள் உள்ளனவா என பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
நாளை சரண்
இதனிடையே கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் யுவராஜ் நாளை சரணடையப் போவதாக தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களாக ஆடியோ, வீடியோ என பரபரப்பை ஏற்படுத்தி வந்த யுவராஜ், விரைவில் சரணடைவார் என அவரது மனைவி சுவீதா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.