ராமநாதபுரம் அருகே சயனைடு குப்பிகள், சேட்டிலைட் போன்களுடன் பிரபாகரன் உறவினர் உட்பட 3 பேர் கைது
ராமநாதபுரம்: தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு துப்பாக்கி, சேட்டிலைட் போன்கள், ஜிபிஎஸ் கருவிகள், சயனைடு குப்பிகளுடன் தப்ப முயன்றதாக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் உறவினர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்போது உச்சிப்புளி நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு காரை சோதனையிட்டதில் துப்பாக்கி, சேட்டிலைட் போன்கள் இருந்தன. இதனைத் தொடர்ந்து காரை முழுவதுமாக போலீசார் சோதனை நடத்தினர்.
இச்சோதனையில் 4 சேட்டிலைட் போன்கள், 1 துப்பாக்கி, 4 ஜிபிஎஸ் கருவிகள், 75 சயனைடு குப்பிகள், 300 கிராம் சயனைடு, 6 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. அக்காரில் பயணம் செய்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரில் ஒருவர் ஈழத் தமிழர். அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்; தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் உறவினர்; தமிழகத்தில் அகதியாக வசித்து வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. எஞ்சிய 2 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இருந்து படகு மூலமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனராம்.
இது தொடர்பாக ஒன் இந்தியாவிடம் கருத்து தெரிவித்த போலீஸ் அதிகாரிகள், இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களா? என்பது குறித்து உடனே கூற முடியாது; அதே நேரத்தில் தமிழகத்தில் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது என்று மட்டும் கூறினர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க இலங்கை இறுதி யுத்தத்தில் தப்பிய முன்னாள் உறுப்பினர்கள் முயற்சிப்பதாக உளவுத்துறை தகவல்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தன.
அதே நேரத்தில் ஈழத் தமிழர்களை பயன்படுத்தி பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தென்னிந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபட முயற்சித்ததும் அது முறியடிக்கப்பட்டதும் ஏற்கனவே நடந்துள்ளது. அருண்செல்வராஜ் என்ற ஈழத் தமிழரை இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி தமிழகத்துக்குள் ஊடுருவ செய்து முக்கியமான அரசு கட்டிடங்கள், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு தூதரகங்கள் குறித்த தகவல்களை சேகரித்திருந்ததும் ஏற்கெனவே அம்பலமானது.
இருப்பினும் தற்போது பிடிபட்ட நபர்களிடம் இருந்து சயனைடு குப்பிகளும் சயனைடும் கைப்பற்றியிருப்பது என்பதுதான் போலீசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர்தான் சயனைடு குப்பிகளை பயன்படுத்துவர். இதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களா? என கைது செய்யப்பட்ட மூவரிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.