கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அதிகாரி சுட்டு 3 சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் படுகொலை: 2 பேர் படுகாயம்
சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் சக வீரர்கள் 5 பேர் மீது பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியால் சுட்டதில் 3 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி குண்டு பாய்ந்து இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள், அதிகாரிகளின் குடியிருப்பு பாதுகாப்புக்காக சுமார் 500 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் 8 மணி நேரச்சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர்.
இந்த நிலையில் அணு மின் நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவுனரிடையே நேற்று நள்ளிரவு தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு இன்று அதிகாலை வரை தொடர்ந்தது.
இன்று அதிகாலை 5 மணி அளவில் நேரச்சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு படையினர் பிரித்து விடப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் பாதுகாப்பு அதிகாரி வி.பி.சிங் திடீரென துப்பாக்கியால் 5 வீரர்களை சுட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் சேலத்தைச் சேர்ந்த கணேசன், விருதுநகரைச் சேர்ந்த சுப்புராஜ், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மோகன் சிங் ஆகியோர் பலத்த குண்டடி பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மேலும் கோவர்தன்சிங், பிரதாப்சிங் ஆகியோர் பலத்த காயத்துடன் கல்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அணுமின் நிலைய வளாகத்தில் சகவீரர்கள் 5 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்திய பாதுகாப்பு அதிகாரி வி.பி.சிங்கை கல்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி கூறியுள்ளார்.