சென்னை: ஒரே நாளில் மூன்று இடங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்
சென்னை: சென்னையில் புதன்கிழமையன்று மூன்று கல்லூரிகளைச் சேர்ந்த வெவ்வேறு இடங்களில் தகராறில் ஈடுபட்டனர்.
கற்களை வீசியும், பாட்டில்களை வீசியும் மோதிக்கொண்ட மாணவர்களால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். மாணவர்களின் மோதலுக்கு முற்றுப் புள்ளிவைக்கும் வகையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கல்லூரி மாணவர்கள்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் பிராட்வே - மந்தைவெளி செல்லும் பேருந்தில் ஏறி பெண் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டனர். அவர்களை பேருந்து ஓட்டுநர் இறக்கி விட்டுள்ளார். இதனையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளிடமும் மாணவர்கள் தகராறு செய்தனர். பேருந்தின் கண்ணாடியை கற்களை வீசி உடைத்தனர். இது குறித்து அண்ணாசாலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மாநிலக்கல்லூரியில் மோதல்
மாநிலக்கல்லூரி மாணவர்களுக்கு இடையே திடீரென ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். கல்லூரி வளாகத்தை விட்டு வெளியோ ஒடிவந்த அவர்கள் மெரினா கடற்கரை சாலையில் தகராறு செய்யவே பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். அண்ணா சதுக்கம் காவல்துறையினர் வந்து மாணவர்களை விரட்டியடித்தனர். மோதலுக்கு காரணம் எழிலகம் அருகே ஒரு உணவகத்தில் மாணவர்கள் சாப்பிடும் போது ஏற்பட்ட தகராறு கோஷ்டி மோதலாக உருவெடுத்தாக போலீசார் தெரிவித்தனர்.
நந்தனம் அரசு கலைக் கல்லூரி
நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் சிலர் 23 சி பேருந்தின் மேற்கூரையின் மீது ஏறி பயணம் செய்தனர். பேருந்துக்குள் இருந்த மாணவர்கள் சத்தமாக பாட்டுப் பாடவே, அதற்கு மேற்கூரையில் பயணித்த மாணவர்கள் நடனம் ஆடியுள்ளனர். இதனையடுத்து அண்ணாசாலை போலீசார் பேருந்தை நிறுத்தி மாணவர்களை விரட்டியடித்தனர். மேற்கூரையில் ஏறி நடனமாடிய மாணவனை கைது செய்தனர்.
அடிக்கடி மோதல்
சென்னையில் மாணவர்கள் மோதிக்கொள்வது தினசரி நிகழ்வாகி வருகிறது. கடந்த 30ம் தேதி மாநிலக்கல்லூரி - பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டதில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் மூவர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.