ஊட்டியில் சிபிஐ அதிகாரிகள் போர்வையில் காட்டேஜ் உரிமையாளரிடம் பணம் பறித்த 3 போலீசார்
நீலகிரி: ஊட்டியில் சிபிஐ அதிகாரிகள் என்று கூறி காட்டேஜ் உரிமையாளரிடம் பணம் பறித்த ஆயுதப்படை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருக்கும் அக்ரஹாரம் பகுதியில் ஏராளமான தனியார் காட்டேஜ்கள் உள்ளன. அங்கு உள்ள ஒரு காட்டேஜின் மேலாளர் மனோஜ் என்பவர் போலீசில் புகார் கொடுத்ததையடுத்து ஊட்டி ஆயுதப்படை போலீசார் சித்திக் ரஹ்மான்(22), மணிகண்டன்(24), இளைஞர் காவல் படையைச் சேர்ந்த கிருஷ்ணன்(20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஒரு தனியார் காட்டேஜுக்கு சென்ற சித்திக் ரஹ்மான், மணிகண்டன், கிருஷ்ணன் ஆகியோர் அதன் உரிமையாளரிடம் தங்களை சிபிஐ அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு இங்கு விபச்சாரம் நடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.25 ஆயிரம் ரொக்கம் தர வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் ரூ.2 ஆயிரத்து 500 கொடுத்துள்ளார். மீதி பணத்தையும் கொடுக்கும் முன்பு அவருக்கு அந்த 3 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் போலீசில் புகார் கொடுத்ததும் அந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் அவர்கள் கூறுகையில்,
ஊட்டியில் அனுமதி இன்றி ஏராளமான காட்டேஜ்கள் உள்ளன. அதில் சிலவற்றில் வெளிமாநில பெண்களை வைத்து விபச்சாரம் நடக்கிறது என்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த தவறை கண்டுபிடித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று நினைத்து சென்றோம். ஆனால் பணத்தை பார்த்ததும் கை நீட்டிவிட்டோம் என்றனர்.