கடல் மாசடைவதால் மனிதனுக்கு ஆபத்து: கடல்சார் ஆய்வாளர் எச்சரிக்கை !
மதுரை: கடல் மாசடைந்து வருவதால் நாளை மனிதன் அழியும் நிலை ஏற்படும் என மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கில் கடல்சார் ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.
மதுரை காமராசர் பல்கலைக் கழக தொடர்பியல் துறை, புவி இதழியல் இணையம், இண்டர்நியூஸ் சார்பில் இளம் மற்றும் வளரும் மொழி-ஊடகவியலாளர்களுக்கான பருவநிலை மாற்றச் செய்தி தயாரிப்பு குறித்த 3 நாள் தேசிய பயிலரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மொழியியல் மற்றும் தொடர்பியல் புலத் தலைவர்(பொ) சு.நாகரத்தினம் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் கடல்சார் பருவநிலை மாற்றம் குறித்து பேசிய கடல்சார் ஆய்வாளர் சிவ.பாலசுப்பிரமணி கூறியது: பல தீவுகள் ஏற்கனவே கடலுக்குள் மூழ்கிவிட்டன. தற்போதும் கூட நிறைய தீவுகள் மூழ்கி வருகின்றன. உலகிலேயே இரண்டாவது பெரிய கடற்கரையை கொண்ட தமிழ்நாட்டில் 591 கடற்கரை கிராமங்கள் உள்ளன.
தற்போது கடல்வளம் மிகவும் மோசமடைந்து வருகிறது. கடல் வெப்பமயமாதலாலும், கழிவுகளை கொட்டும் இடமாக கடலை கருதுவதாலும் நிறைய கடல் உயிரினங்கள் அழிந்து வருகின்றன.சோமாலியா நாட்டில் கொட்டப்படும் குப்பை கூட கடல் வழியாக தமிழகத்துக்கு வரும். அதேபோல தமிழ்நாட்டில் கொட்டப்படும் குப்பை கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்லும்.
கடல் நீர் மாசடைந்த காரணத்தால் சமீபத்தில் கூட 81 திமிகலங்கள் கடலில் இறந்து கரை ஒதுங்கின. உலகில் மனிதன் மட்டுமில்லை. பல உயிரினங்களும் வாழ்கின்றன. கடல் மாசடைவதால் நாளை மனிதனே அழியும் நிலை ஏற்படும் என்றார்.முன்னதாக வைகை நதி, கிருதுமால் நதிகளின் முக்கிய பகுதிகளில் கள ஆய்வு நடைபெற்றது.
கருத்தரங்கில் டெல்லி பிஸினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிக்கையின் மூத்த இணை ஆசிரியர் நிதின் சேத்தி, கொல்கத்தாவைச் சேர்ந்த மாண்ட் அமைப்பின் தகவல் தொடர்பு இயக்குநர் நிர்மால்யா முகர்ஜி, மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் கீதாலட்சுமி, பெங்களூரைச் சேர்ந்த மரியன் டி.நாசரத், ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன், டெல்லி ஆற்றல் மற்றும் வள நிறுவன பல்கலைக் கழக ஆய்வாளர் ராதிகா மிட்டல் உள்ளிட்டோர் பருவ நிலை மாற்றம் குறித்து விளக்கமளித்தனர்.