சுரா, பாரை, ஊளி, கெழுத்தி.. கேட்டாலே வாய் ஊறும்.. கோவையை கலக்கிய கடல் உணவு திருவிழா!
கோவையில் கடல் உணவு திருவிழா நடைபெற்று வருகிறது.
Recommended Video
கோவை: பொன் நிறத்தில், மொறு மொறுவென பொரித்தெடுக்கப்பட்ட மீன்கள் ஒருபுறம், நிறம், சுவை, மணம் என அனைத்தும் கலந்து ஈர்க்கும் இறால் பிரியாணி மறுபுறம்.. உருண்டை உருண்டையாய் கண்ணை கவரும் நண்டு லாலிபாப்கள், குவித்து வைத்த சுரா புட்டுகள்.. என மூக்கையே துளைத்து எடுத்து செல்கிறது. கோவையில் நடைபெற்றுவரும் கடல் உணவு திருவிழாவில்தான் இவை அத்தனையும்.
அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்த திருவிழா கடந்த 16-ம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெற்று வருகிறது. மாலை 6.30 மணி முதல் இந்த கடல் உணவு திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர். இதில், இந்தியா மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன.
75 வகை மீன்கள்
கடல் உணவு வகைகள் தயார் செய்வதற்காகவே கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து, கண்டெய்னர் லாரிகளில், மீன்கள் கோவையில் வந்து இறங்கியுள்ளன. மீன்களுடன் அவைகளை சுவையாக சமைத்து தருவதற்காக சமையல் நிபுணர்களும் வந்து உள்ளனர். இவர்கள், விழாவின் முதல் மற்றும் இரண்டாம் நாட்களில் வஞ்சிரம், பாட்ஷா, ஊளி, பாரை, சுரா, மாந்தல், சங்கரா, கெழுத்தி உட்பட, 75 வகையான மீன்களில் 100 க்கும் மேற்பட்ட உணவு வகைகள் தயார் செய்து, அவைகளை பொதுமக்களின் பார்வைக்காக மட்டுமல்லாமல் ருசித்து மகிழவும் இடம்பெற செய்தனர்.
வாழை இலை கறிமீன்
இன்று நடைபெறும் விழாவிலும் இறால் பிரியாணி, இறால் மசாலா, நண்டு லாலிபாப், நெத்திலி மீன் ஃபிரை, கடல் உணவு ஆம்லெட், பட்டர் பிஷ் மசாலா, நார்வே ஜூஸி பிஷ், சுராபுட்டு போன்ற பல அரிய வகை உணவுகள் தனித்துவமிக்க வகையில் பரிமாரப்படுகின்றன. ‘சேண்ட் லாப்ஸ்டர்' எனப்படும் அரியவகை இறாலையும் மெனுவில் இறக்கி வெரைட்டி காட்டுகின்றனர். ஆனால் இந்த விழாவில் நிறைய பேரை ஈர்த்தது, வாழை இலையில் மடித்து தரப்படும் கறி மீன் பொழிச்சதுதான். இவை அல்லாமல், நெத்திலி மீன் வறுவல், இறால் வறுவல், மத்தி மீன் வறுவல் என சைஸ் வாரியாக மீன்கள் மீன்பிரியர்களை சுண்டி இழுத்து வருகிறது. இது போதாதென்று தென்னிந்திய கடல் உணவுகள், சைனீஸ் உணவுகளும் இடம் பெற்று உள்ளன.
பக்கவிளைவு இல்லாத சமையல்
சமையல் கலைஞர்கள் பொதுமக்கள் கண் முன்னிலையிலேயே வேகமாகவும், சுவையாகவும், மீன்களை சமைத்து காண்பிப்பது ஈர்க்கக்கூடியதாக உள்ளது. இதனால் வேடிக்கை பார்க்க செல்லும் அனைவருக்கும் சாப்பிடும் ஆசையே வந்துவிடுகிறது. மேலும் இந்த நிபுணர்கள் கடல் உணவை எண்ணெயில் பொறித்தெடுக்காமல் ஆரோக்கியமான முறையில் வேகவைத்தும், க்ரில் செய்தும் கொடுப்பது கூடுதல் சுவை மற்றும் கூடுதல் ஈர்ப்பு.
காத்துக் கிடக்கும் மீன்கள்
"பொதுவாக கடல் உணவுகளை சாப்பிடுவதனால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. தரமான கடல் உணவுகளை ஆலிவ் எண்ணெயினை பயன்படுத்தி பக்குவமாக சமைப்பதால், எந்தவித தயக்கமுமின்றி எங்கள் உணவகத்திற்கு வந்து கடல் உணவுகளை சுவைத்து மகிழலாம்" என கூறுகின்றனர் ஹோட்டலின் சமையல் கலைஞர்கள். கோவை மக்களுக்கு சுவையுடன் விருந்தளிக்க இன்னும் பல வகையான மீன்கள் இன்றும் ஆவலுடன் காத்து கிடக்கின்றன. எப்படியோ, தற்போது பெய்து வரும் மழைக்கு, கோவைவாசிகள் முதல்முறையாக.. சுவையான பல வெரைட்டி கடல் உணவு வகைகளை.. ஒரே இடத்தில்.. சுடச்சுட.. சாப்பிடுவதே கலக்கல்தான்.. என்ஜாய் மக்களே...