ஆசிரியர்களை குறி வைத்து வழிபறி… 3 பேர் மீது குண்டாஸ்
ஆசிரியர்களை குறி வைத்து தொடர் வழிபறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாத்தூர்: தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால் இருக்கும் மற்ற ரவுடிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
அருப்புக்கோட்டை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் அடிக்கடி செயின் பறிப்பு நடந்து வருகிறது. குறிப்பாக, ஆசிரியர்களை குறி வைத்து நகை பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்த சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பீதியை கிளப்பி வந்தது.
இந்நிலையில் இதனை தடுக்க விருதுநகர் மாவட்ட எஸ்.பி. ராஜராஜன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. தனபால் ஆலோசனையின்படி, இன்ஸ்பெக்டர் முருகையன் தலைமையில் தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டனர். தனிப்படை போலீசார் சந்தேகப்படும் படியாக இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரியும் நபர்கள், பழைய குற்றவாளிகள் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த தொடர் வழிப்பறி சம்பவங்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் நடுவப்பட்டியை சேர்ந்த சேது என்ற சேதுராமன், ஆலம்பட்டியை சேர்ந்த மணிகண்டன், மாரிச்செல்வம் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த 3 பேர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 25-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க அருப்புக்கோட்டை டவுன் இன்ஸ்பெக்டர் முருகையன், மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் சிவஞானம் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.