அதிமுகவின் மூன்று முகங்கள்...'டென்ஷன்' ஓபிஎஸ் ... 'தெனாவட்டு' தினகரன்...பம்மும் எடப்பாடி கோஷ்டிகள்!
ஜெயலலிதா இருந்த போது கூழை கும்பிடு போட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் தற்போது மூன்று அணிகளாக பிரிந்த பிறகு மூன்று முகங்கள் வந்துவிட்டன.
சென்னை: ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை அதிமுக தலைவர்கள் அவரது காலடியில் மிதி வாங்காத குறையாக இருந்தனர். தற்போது மூன்று அணிகளாக பிரிந்து விட்டதும் டென்ஷன், தெனாவட்டு, பயம் கலந்த பேச்சு ஆகிய 3 முகங்களுடன் வலம் வருகின்றனர்.
ஜெயலலிதா இருந்த போது அவரை எதிர்த்து கட்சியினர் மூச்சு கூட விடாத அளவுக்கு ராணுவக் கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தார். அவர் முன்னால் சென்றதும் ஆட்டோமேடிக்காக அவர்களது முதுகு தண்டுவடம் வளைந்து விடும். யாரும் யாரையும் எதிர்த்து கருத்துகளை தெரிவிக்க மாட்டார்கள்.
அப்படி பேசினால் போயஸ் தோட்டத்துக்கு வரவழைக்கப்பட்டு செம டோஸ் விழும் என்பது அனைவருக்கும் தெரியும். இப்படி இருந்த நிலை தற்போது மாறிவிட்டது. சாதாரண எம்எல்ஏ கூட கட்சியின் மூத்த நிர்வாகிகள் எடுக்கும் முடிவுகளை எதிர்க்கிறார்.
சசி கோஷ்டி
அதிமுக சசிகலாவின் அணி, தினகரனின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆட்சியின் விவகாரங்கள் அனைத்திலும் அவர் மூக்கை நுழைத்து, முதல்வர் என்றும் பாராமல் அவரை அவமானப்படுத்தியதை கொங்கு மண்டல அமைச்சர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
தினகரனுக்கு ஆப்பு
மேலும் ஆர்கே நகர் தொகுதி பணப்பட்டுவாடா, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் உள்ளிட்ட புகார்களால் அவர்கள் மேலும் அதிருப்தி அடைந்தனர். இதனால் தினகரனை கழற்றிவிட பிளான் செய்த நிலையில் அதிமுக இணைவை வரவேற்பதாக தெரிவித்த பன்னீர் செல்வத்தின் பேச்சு அமைச்சர்களுக்கு சற்று ஆறுதல் அளித்தது.
ஒதுக்கி வைப்பு
இதுதான் சாக்கு என்று இரவோடு இரவாக தினகரன் எதிர்ப்பு ஆபரேஷனை தொடங்கி செயல்படுத்திவிட்டனர். சசிகலா, தினகரனை ஒதுக்கி வைத்ததாக எடப்பாடி அணியினர் எடுத்த முடிவு தங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று ஓபிஎஸ் கூறினார்.
ஜெயக்குமார் நக்கல்
இந்நிலையில் அமைச்சர் ஜெயகுமார், தினகரனை ஒதுக்கி வைத்ததற்கு பன்னீர் செல்வத்தின் நிபந்தனை காரணமல்ல. விட்டால் அமெரிக்காவில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கே ஓபிஎஸ் தான் காரணம் என்று கூறுவார் போல் என நக்கலடித்தார். தம்பிதுரையோ முதல்வர் பதவி ஓபிஎஸ்ஸுக்கு வழங்கப்படாது என்று மறைமுகமாக கூறிவந்தார். இதனால் அதிமுக கோஷ்டிகள் இணைவதில் சிக்கல் ஏற்பட்டது.
டென்ஷனான ஓபிஎஸ் அணி
இதைக் கேட்டு உச்சக்கட்ட கோபம் கொண்ட ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முனுசாமி, தம்பிதுரை எல்லாம் ஒரு ஆளா என்று கேட்டு கட்சியில் அவரை யாரும் மதிப்பதில்லை என்று வறுத்தெடுத்துவிட்டார். அதேபோல் ஜெயக்குமாரை மூன்றாம் தர அரசியல் நடத்துகிறார் என்றும் ஓபிஎஸ் குறித்து இதுபோன்ற தரம் தாழ்ந்த கருத்துகளை கூறுவதா என்று அவரையும் விட்டு வைக்காமல் கோபமாக கேட்டார்.
தெனாவட்டான தினகரன்
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதை போல அதிமுகவின் இருந்து தனியாக செயல்பட்டு வரும் தினகரன் கோஷ்டி இருக்கிறது, கட்சி சேர்ந்தால் என்ன சேராட்டி என்ன. நாம் கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்டோம் என்ற எண்ணத்தில் லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை என்பதை போல உள்ளனர்.
பம்மும் எடப்பாடி அணி
122 எம்எல்ஏ-க்கள் எங்கள் பக்கம் உள்ளனர் என்று வீர வசனம் பேசிய எடப்பாடி அணியினர் தற்போது கே.பி. முனுசாமியின் ஆவேச கருத்தால் எங்கே பேச்சுவார்த்தை நடக்காமல், அதிமுக இணையாமல் போய் விடுமோ என்ற பயத்தில் ஜெயக்குமார் பேசியதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம்... ஜெயலலிதா மரணம் தொடர்பாக கோர்ட் பிறப்பிக்கும் ஆணையை தமிழக அரசு செயல்படுத்தும் என்று பம்முகின்றனர். இவர்களை பார்க்கும் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற காமெடிதான் நினைவுக்கு வருகிறது. அதேசமயம் ஜெயலலிதாவுக்கு முன்னர் புள்ளப்பூச்சி போல் இருந்தவர்களெல்லாம் இன்று ஆவேசமாக பேசுகின்றனர்.