கறுப்புக்கொடி காட்டினா சும்மாவா விடுவோம்.. ஸ்டாலினுக்கு அமைச்சர் பதில்!
கறுப்புக்கொடி காட்ட முயன்றதால் திமுக எம்எல்ஏக்களை கைது செய்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை கறுப்புக்கொடி காட்ட முயன்றதால் திமுக எம்எல்ஏக்களை கைது செய்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சட்டசபையில் ஸ்டாலினின் கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த பதிலைக் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. முதல்வர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பங்கேற்க அப்பகுதி திமுக எம்எல்ஏக்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
அமைச்சர் விஜயபாஸ்கரும் போனில் எம்எல்ஏக்களை அழைத்துள்ளார். ஆனால் நிகழ்ச்சிக்கு சென்ற எம்எல்ஏக்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த சம்பவம் திமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்றைய சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் திமுக எம்.எல்.ஏக்கள் கருப்புக் கொடி காட்ட முயன்றதால் கைது செய்யப்பட்டதாக பதிலளித்தார். விழாவில் கலந்துகொள்ளாமல் குந்தகம் விளைவிக்க முயன்றதால் அவர்களை கைது செய்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.