சத்தியமங்கலத்தில் 15 அடி ஆழ தோட்டத்து கிணற்றில் விழுந்த 3 யானைகள் மீட்பு
கிணற்றில் விழுந்த 3 யானைகள் உயிருடன் மீட்கப்பட்டன.
Recommended Video
ஈரோடு: 15 அடி ஆழ கிணற்றில் விழுந்த 3 யானைகள் ஈரோட்டில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஏராளமான புலி, மான், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் அவ்வப்போது மலைகிராமங்களில் நுழைவது வாடிக்கை.
இந்நிலையில் கடம்பூர் மலைப்பகுதி கானக்குந்தூர் குருசாமி என்பவரின் தோட்டத்து கிணற்றில் 3 பெண் யானைகள் விழுந்து உயிருக்கு போராடின. வனத்தை ஒட்டியுள்ள தோட்டத்தில் இரை தேடி வந்த யானைகள் புதர் மண்டி கிடந்த தரை மட்ட கிணற்றில் ஒன்றன் பின் ஒன்றாக கிணற்றில் விழுந்தன.
தகவலறிந்த கிராமமக்கள் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து 15 அடி கிணற்றில் விழுந்த யானைகளை மீட்கும் நடவடிக்கையை தொடங்கினர். பொக்லைன் இயந்திரத்தின் மூலம் கிணற்றின் கரைகள் வெட்டி எடுத்து பாதை ஏற்படுத்தப்பட்டது.
இதனையடுத்து யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக கிணற்றில் இருந்து வெளியே வந்து வனத்திற்குள் சென்றது. சுமார் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு 3 யானைகளும் கிராமமக்கள் உதவியுடன் வனத்துறையினர் மீட்டனர்.