அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி 10 பேர் பலி… சோகமான ஆயுத பூஜை விடுமுறை!
திருநெல்வேலி: ஆயுதபூஜை நாளில் நெல்லை அருகே முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உட்பட 7 பேர் பலியாகி உள்ளனர். விழுப்புரம் அருகே தாமரைக்குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலியானார்கள்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அம்பை ரோட்டை சேர்ந்த பிரபாகரன் மகன் ஹரக் கிருபாகரன். 21 வயதான இவர் செங்கல்பட்டு தனியார் பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படித்து வந்தார். ஆயுத பூஜை விடுமுறைக்காக உடன் படிக்கும் நண்பர்களான செங்கல்பட்டை சேர்ந்த உஸ்மான் மகன் தமீம் அன்சாரி, குமாரவேல் மகன் சோபன்பாபு ஆகியோருடன் கடந்த 9ம் தேதி ஊருக்கு வந்தார்.
10ம் தேதி காலை 11 மணி அளவில் நண்பர்கள் 3 பேரும் முக்கூடல் முத்துமாலையம்மன் கோயில் பின்புறம் தாமிரபரணி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துக் கொண்டிருந்த போது, தமீம் அன்சாரி சுழலில் சிக்கி தத்தளித்தார். அவரை காப்பாற்ற மற்ற 2 பேரும் முயற்சி செய்துள்ளனர். இதில் 3 பேருமே தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். தகவலறிந்து சேரன்மகாதேவி தீயணைப்பு படை வீரர்கள் வந்து மூவரின் உடல்களையும் மீட்டனர்.
அதே போன்று கம்ப்யூட்டர் இன்ஜினியர்களான பாண்டிச்சேரியை சேர்ந்த சதீஷ்குமார், வசந்தராஜ், காரைக்கால் நெடுங்காடு அன்னவாசல் தெரு நக்கீரன், சென்னை விருகம்பாக்கம் சீனிவாசன் ஆகிய 4 பேரும் பாபநாசம் தலையணையில் குளிக்கச் சென்று தண்ணீர் மூழ்கி பலியாகியுள்ளனர். இவர்கள் 4 பேரும் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்தனர். ஆயுதபூஜை விடுமுறையை கொண்டாட நெல்லை மாவட்டம் பாபநாசத்துக்கு சென்றனர். அங்குள்ள சேனைத்தலைவர் திருமண மண்டபத்தில் அறை எடுத்து தங்கினர். 9ம் தேதி காலை குளிப்பதற்காக அருகில் உள்ள தலையணைக்கு சென்றவர்கள் இரவு நீண்ட நேரமாகியும் அறைக்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த மண்டப நிர்வாகி விகேபுரம் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை தலையணையில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் உடல் மிதந்தது. நேற்று காலை ஒன்றன் பின் ஒன்றாக மேலும் 3 பேர் உடல் மிதந்தது.
போலீசார் அவற்றை மீட்டனர். நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நால்வரின் உடல்களும் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த ஆயுத பூஜை விடுமுறையில் 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கப்பியாம்புலியூரை சேர்ந்தவர் முருகவேலுக்கு 9 வயதான அமர்நாத் மற்றும் 7 வயதான ஜெயகிருஷ்ணன் என 2 மகன்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் தனியார் பள்ளி ஒன்றில் முறையே 4 மற்றும் 2ம் வகுப்பு படித்து வந்தனர். இதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் 9 வயதான பிரவின்குமாருடன், இவர்கள் இருவரும் ஆயுதபூஜை அன்று சைக்கிளை கழுவ, ஊர் எல்லையில் உள்ள தாமரைகுளத்துக்கு சென்றனர். அங்கு சைக்கிளை கழுவிவிட்டு குளித்தபோது, 3 பேரும் நீரில் மூழ்கி இறந்தனர். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுமுறை நாளைக் கொண்டாடச் சென்ற இளைஞர்கள், சிறுவர்கள் என 10 தண்ணீரில் மூழ்கி பலியாகியுள்ளதால் அவர்களின் பெற்றோர்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.