சவூதி அரேபியாவில் வெளிநாட்டு கப்பல் மோதியதில் 3 தமிழக மீனவர்கள் பலி
சவூதி அரேபியாவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் மீது வெளிநாட்டுக் கப்பல் மோதியதில் படகு நொறுங்கியதுடன் நாகர்கோவில் மீனவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
நாகர்கோவில்: சவூதி அரேபியாவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் மீது வெளிநாட்டுக் கப்பல் மோதியதில் படகு நொறுங்கியதும் நாகர்கோவிலைச் சேர்ந்த 3 மீனவர்கள் பலியாகியுள்ளனர்.
நாகர்கோவிலை அடுத்த கேசவன்புத்தந்துரை மற்றும் ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த ஜார்ஜ், ஜோசப் சுகந்தன், நெவில். இவர்கள் மீனவர்களாவர். இவர்கள் 3 பேரும் சவூதி அரேபியாவில் தரின் என்ற இடத்தில் விசைப் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வெளிநாட்டுக் கப்பல் ஒன்று இவர்களது விசைப்படகு மீது மோதியது.
இதில் படகு நொறுங்கியதுடன் 3 பேரும் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்த மீனவர்களை மீட்டுத் தாருங்கள் என்று மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே படகு விபத்தில் ஒரு மீனவர் மட்டுமே உயிரிழந்ததாகவும் மற்ற 2 பேர் மாயமானதாகவும் தகவல் கிடைத்துள்ளதாகவும் கேசவன்புத்தந்துரை மக்கள் கூறுகின்றனர்.
தமிழக அரசும், மத்திய அரசும் மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.