சென்னையில் கடும் மேகமூட்டம்- 3 விமானங்கள் பெங்களூருக்குத் திருப்பி விடப்பட்டன
சென்னை: சென்னையில் இன்று காலை கடும் மேகமூட்டம் நிலவியதால் விமானப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
சென்னைக்கு வர வேண்டிய 3 விமானங்கள் பெங்களூருக்குத் திருப்பி விடப்பட்டன.
சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியதால் நகரமே அல்லோகல்லப்பட்டுப் போனது.
நகரிலும், பெரும்பாலான புறநகர்களிலும் இந்த காற்றுடன் கூடிய கன மழையால் பல பகுதிகளில் மரங்கள் விழுந்தன. மின் விநியோகமும் பாதிக்கப்பட்டது. இரவில் பெய்த மழை தற்போது நின்று விட்டபோதிலும் வானம் இருட்டிக் கொண்டு உள்ளது. பல இடங்களில் வானம் கருத்துக் காணப்படுகிறது.
இப்படி வானம் மேகமூட்டமாக இருப்பதால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை டெல்லி, மும்பை, கோலாலம்பூரில் இருந்து வர வேண்டிய விமானங்கள் பெங்களூருக்குத் திருப்பி விடப்பட்டன.