ராணி மாதிரி பார்த்துக்கறேன்.. மனைவிமாரிடம் ஆசை காட்டிய முதலாளியை போட்டுத் தள்ளிய 3 தொழிலாளர்கள்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தங்களது மனைவியரிடம் நான் உங்களைப் பார்த்துக் கொள்கிறேன், புருஷனை விட்டு விட்டு வந்து விடுங்கள் என்று ஆசை வார்த்தை கூறிய கிரானைட் தொழில் செய்து வந்த நபரை சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டனர் அவரிடம் வேலை பார்த்து வந்த 3 தொழிலாளர்கள்.
கொல்லப்பட்டவரின் பெயர் சுயம்புலிங்கம். 48 வயதான இவர் கிரானைட் கல் பதிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இவர் 25 வருடத்திற்கு முன்பே கன்னியாகுமரியிலிருந்து சத்தியமங்கலம் அருகே கொடிவேரி பகுதியில் குடியேறினார். மனைவியும், நான்கு குழந்தைகளும் உள்ளனர்.
இவரிடம் சிலர் கிரானைட் கல் பதிக்கும் வேலையில் தொழிலாளர்களாக இருந்து வந்தனர்.2 நாட்களுக்கு முன்பு கொடிவேரி அருகே பவான ஆற்று படித்துறை பகுதியில் இவர் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். தலை, கை, கால்கள் மற்றும் ஆணுறுப்பு ஆகியவை தனித் தனியாக வெட்டி எடுக்கப்பட்டிருந்தன.
சத்தியமங்கலம் டி.எஸ்.பி., மோகன் தலைமையிலான போலீசார், சுயம்புலிங்கம் உடலை கைப்பற்றி விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கோபியை அடுத்த காசிபாளையத்தைச் சேர்ந்த சரவண பிரகாஷ் என்பவர் இந்தக் கொலை தொடர்பாக விஏஓவிடம் சரணடைந்தார். அவரை விஏஓ வெள்ளியங்கிரி போலீஸில் ஒப்படைத்தார். போலீஸார் கைது செய்து விசாரித்தபோது மேலும் இரண்டு பேரின் பெயரைக் கூறினார் பிரகாஷ் அவர்களது பெயர் சதீஷ், ராஜா. இருவரும் கொமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் கொடுத்த வாக்குமூலம் போலீஸாருக்கு அதிர்ச்சி தருவதாக இருந்தது. 3 பேரும் சுயம்புலிங்கத்திடம் ப்ல காலமாக வேலை பார்த்து வருகின்றனர். ஆனால் இந்த 3 பேரின் மனைவிகளையும் குறி வைத்துள்ளார் சுயம்புலிங்கம். இவர்கள் இல்லாத நேரத்தில் அவர்களது வீட்டுக்குப் போய் அவர்களது மனைவியரிடம், உங்களது புருஷன் திருட்டு வழக்கில் தொடர்புள்ளனர். சிறைக்குப் போய் வி்டுவார்கள். கவலைப்படாதீர்கள். நான் இருக்கிறேன். நான் உங்களை ராணி மாதிரி பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி வந்துள்ளார்.
இதை அறிந்த 3 பேரும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்தனர். இதற்கு உச்சமாக செப்டம்பர் 30ம் தேதி வேலையை முடித்து விட்டு 3 பேரும் மது குடிக்கப் போயுள்ளனர். அப்போது சுயம்புலிங்கமும் அங்கு வந்துள்ளார். மது போதையில் இவர்களது மனைவி பற்றி அவர் வர்ணித்துப் பேசியுள்ளார். இதனால் 3 பேரும் மேலும் கொதிப்படைந்தனர்.
இதையடுத்து அருகில் இருந்த கல்லை எடுத்து சரமாரியாக தாக்கி அடித்துக் கொன்றனர். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி போட்டு விட்டுப் போய் விட்டனராம்.
போலீஸார் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.