தி.நகர் பெண் சாந்தி கொலை வழக்கில் 3 நேபாளிகள் கைது
சென்னை தி. நகரில் பெண் கொலை வழக்கில் 3 நேபாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தியாகராய நகரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கோடீஸ்வர பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நேபாள நாட்டை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஒருவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கைதானவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலை வித்யோதயா பிரதான சாலையில் வசித்து வந்தவர் சாந்தி ,60. இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனியாக வசித்த மூதாட்டி சாந்தி கடந்த 31-ம் தேதியன்று அவரது பங்களாவில் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் கிடந்தார். சாந்தி வசித்து வந்த வீடு மற்றும் நிலத்தின் இன்றைய மதிப்பு ரூ.20 கோடி இருக்கும் என்பதால் சொத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் சாந்தி கொலை வழக்கில் நேபாளத்தைச் சேர்ந்த கோரக்சிங் மற்றும் அவரது நண்பர்களான மான் சிங் மற்றும் லலித் கோஹ்லி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.40,000த்தை பறிமுதல் செய்துள்ள போலீசார், மேலும், ஒருவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
சாந்தி கொலை வழக்கு போலீசுக்கு பெரும் சவாலாகவே இருந்தது. சொத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில்தான், போலீஸ் துப்பு துலக்க, கண்காணிப்பு கேமரா பக்கபலமாக இருந்தது. மர்ம நபர்கள், சாந்தியின் வீட்டுக்குள் புகுந்து வெளியேறும் காட்சிகள் தெளிவாக பதிவாகி இருந்தன.
அதை புகைப்படமாக மாற்றி, அபிபுல்லா சாலையில், வீடு வீடாக விசாரித்தபோது, ஹிந்தியில் பேசுபவன் என்ற தகவல் கிடைத்தது. அப்போது, பார்த்திபன் என்பவர் வீட்டு காவலாளி கோரக் சிங் மாயமாகி இருந்ததும், அவனது செல்போன் ஆப் செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. அவனை பிடித்து விசாரித்தபோது, உண்மையை ஒப்புக் கொண்டான். சிம் கார்டுகள் வாங்கி கொடுத்தவனையும் பிடித்துள்ளோம் என்று கூறினர். அந்த பகுதி செல்போன் டவரில் மூலம் செல்போன் அலைபேசிகளின் தரவுகளை எடுத்து அதன் மூலம் குற்றவாளிகளை போலீசார் பிடித்துள்ளனர்.
சாந்தியை கொலை செய்ததும் அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதற்கு சதித் திட்டம் தீட்டியவர் கோரக்சிங். இதற்காக தனது நண்பர்களை நேபாளத்தில் இருந்து வர செய்து, அவர்களுக்கு இங்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளார். தீபாவளி அன்று கொலை செய்ய திட்டமிட்ட அவர்களால் அன்றைய தினம் கொலை சம்பவத்தை அரங்கேற்ற முடியவில்லை. எனவே, மறுநாளான 30ம் தேதி கொலை செய்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீசில் கொலையாளி கோரக்சிங் அளித்த வாக்குமூலம்: மூன்று ஆண்டுகளுக்கு முன், தி.நகரில் பிரபல நகை கடையில் வேலை பார்த்தேன். என் நடவடிக்கை சரி இல்லாததால் நிறுத்தப்பட்டேன். பின் அபிபுல்லா சாலையில் பார்த்திபன் என்பவர் வீட்டில், காவலாளியாக வேலைக்கு சேர்ந்தேன். அப்போது சாந்தி தனிமையில் வசித்து வருவதும் அவரிடம் எப்போதும் லட்சக்கணக்கில் பணம் வைத்து இருப்பதும் தெரியவந்தது.
சாந்தி வீட்டில் கொள்ளை அடிக்க மூன்று மாதங்களுக்கு முன் திட்டமிட்டேன். இதற்காக மான் சிங் உள்ளிட்ட மூவரையும் கூட்டு சேர்த்துக்கொண்டேன். நாங்கள் நால்வரும் சாந்தியை கொன்று, கொள்ளை அடிப்பது என சதி திட்டம் தீட்டினோம். இது பற்றி எங்களுக்குள் பேச திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஒருவன் மூலம் போலி ஆவணம் வாயிலாக சிம் கார்டுகள் வாங்கினோம். அந்த சிம் கார்டில் இருந்து வேறு யாருக்கும் தொடர்பு கொள்ள மாட்டோம்.
தீபாவளி நாளான அக்டோபர் 29 நள்ளிரவு,12 மணிக்கு டிப் - டாப் உடை அணிந்தபடி, சுவர் ஏறி குதித்து, சாந்தி வீட்டு பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தோம்.
அதிகாலை, 2 மணிக்கு எங்கள் கூட்டாளி ஒருவனையும் வரவழைத்தோம். அவன், தெருவில் ஆட்கள் நடமாட்டத்தை கண்காணித்தான். துாங்கிய சாந்தியை எழுப்பி கத்தியை காட்டி பணம் இருக்கும் இடத்தை தெரிவிக்குமாறு கேட்டோம் அவர் மறுத்தார். இதனால் அவரது கை, கால்களை கட்டி வாயில் துணியை திணித்து கொன்றோம்.
அதன்பின் சாந்தி அன்றாட செலவுக்கு வைத்திருந்த இரண்டு லட்சம் ரூபாயை கொள்ளை அடித்துக்கொண்டு அதிகாலை,4 மணிக்கு தப்பினோம். கொள்ளை அடித்த பணத்தை, நால்வரும் பிரித்துக் கொண்டோம். எனக்கு 40 ஆயிரம் ரூபாய் கிடைத்தது என்று அந்த கொலையாளி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
நேபாளிகள் நம்பிக்கையானவர்கள் என்று நம்பி காவலுக்கு வைத்தால், இப்படி கொலை செய்து கொள்ளையடிக்கிறார்களே என்று வேலை கொடுத்த பார்த்தீபன் கூறியுள்ளார். யாரையும் வேலைக்கு அமர்த்தும் முன் அவர்களின் முழு பின்னணி அறிந்து வேலை கொடுங்கள் என்று சென்னை பெருநகர ஆணையர் ஜார்ஜ் கூறியுள்ளார்.
சென்னையில் கடந்த திங்கட்கிழமையில் இருந்து வியாழக்கிழமை வரை 3 பெண்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மூன்று கொலைகளிலுமே வெள்ளிக்கிழமையன்று குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.