சென்னை, மும்பை, கொல்கத்தா கடலில் மூழ்கும் அபாயம்.. ஏன்.. எதற்கு.. பரபர பின்னணி
இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகியவை கடலில் மூழ்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சென்னை: உலக அளவில் நிகழ்ந்து வரும் பருவநிலை மாற்றத்தால் இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகியவை கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உலகத்தை தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது பருவநிலை மாற்றம். இதனால், பனிப்பாறைகள் உருகி வருவதாகவும், பல நகரங்கள் மூழ்கும் அபாயம் உள்ளது என்றும் அறிவியல் விஞ்ஞானிகள் தொடரந்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பசிபிக் மற்றும் ஆசிய பகுதிகளில் பருவநிலை மாற்றம் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஆசிய மேம்பாட்டு வங்கி ஆய்வு
இது தொடர்பாக அண்மையில் ஆசிய மேம்பாட்டு வங்கி ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் சீனா, இந்தியா, வங்கதேசம், இந்தோனேஷியா ஆகிய நாடுகள் அதிக அளவு பாதிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
13 கோடி பேர் உயிரிழக்க வாய்ப்பு
உலகம் வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாறுபாட்டால் இந்தியா, வங்க தேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள கடலோர பகுதிகள் கடலில் மூழ்கும் என்றும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள சுமார் 13 கோடி பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மூழ்கும் 136 பெருநகரங்கள்
உலக அளவில் உள்ள 136 கடலோர பெருநகரங்கள் 2050ம் ஆண்டுக்குள் கடலில் மூழ்கும் என்றும் இந்த ஆய்வு எச்சரித்துள்ளது. இவற்றில் 20 நகரங்கள் ஆசிய கண்டத்தில் உள்ளதாம்.
இந்திய பெருநகரங்கள்
இவற்றில் கொல்கத்தா, மும்பை, சென்னை, சூரத் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களும் மூழ்கும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பருவநிலை மாற்றம் இந்தியாவில் வெள்ள பாதிப்புக்கள் அதிக அளவில் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.