சென்னை: பைக்கில் வெடித்து வங்கியின் 5வது மாடியில் விழுந்த கேஸ் சிலிண்டர்- 3 பேர் காயம்
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் பைக்கில் கொண்டு சென்ற கேஸ் சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறி அருகிலிருந்த வங்கிக் கட்டிட 5வது மாடியில் சென்று விழுந்ததில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை எழும்பூர் கமிஷனர் அலுவலக சாலையில் ஏ.சி.ஷோன் என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் குளிர்சாதன எந்திரங்களுக்கு கேஸ் நிரப்பும் பணியை செய்துவருகிறது. இந்த நிறுவனத்தில் கலீல், கார்த்திக் என்ற ஊழியர்கள் வேலைபார்க்கிறார்கள். இவர்கள் இருவரும் 4 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் ஒன்றை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
நேற்று பகல் 1 மணியளவில் அவர்கள் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. கலீல் வண்டியை ஓட்டினார். கார்த்திக் பின்பக்கம் உட்கார்ந்து கேஸ் சிலிண்டரை வைத்திருந்தார். திடீரென்று அந்த கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் கார்த்திக் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு ரோட்டில் விழுந்தார்.
கலீலும் பைக்கில் இருந்து பாலத்தின் சாலையில் விழுந்தார். அவர்கள் இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள். இந்நிலையில் மேம்பாலம் அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியின் அடுக்குமாடி கட்டிடத்தின் 5 வது மாடியில் கண்ணாடியை உடைத்துக் கொண்டு போய் விழுந்தது வெடித்த கேஸ் சிலிண்டர்.
இதைப்பார்த்து வங்கியில் வேலை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியுடன் கூச்சல் போட்டனர். அதன்பிறகு கேஸ் சிலிண்டர் கண்ணாடியை உடைத்துக்கொண்டு விழுந்ததை பார்த்து ஆச்சரியமடைந்தனர். கேஸ் சிலிண்டர் விழுந்ததில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பொதுமேலாளர் ராஜ்குமார் ஷட்டர்ஜி என்பவரும் லேசான காயமடைந்தார். மேம்பாலத்தில் வெடித்த கேஸ் சிலிண்டர் 50 அடி உயரம் மேலே பாய்ந்து, வங்கி கட்டிடத்திற்குள் போய் விழுந்த சம்பவம் நேற்று பகலில் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.