குற்றாலத்தில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்: மதுரையைச் சேர்ந்த ஒருவர் கைது
குற்றாலம்: குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ள நிலையில் 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த சிவமணி என்வரை என்பவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி வருவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இதனை மனதில் கொண்டு இங்கு வரும் உற்சாக பிரியர்களுக்கு அரசு மதுக்கடைகள் உள்ளன. இது மட்டுமின்றி போதை பிரியர்களுக்காக சிலர் போதைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து ரகசியமாக போலீசார் கண்காணித்து வந்த நிலையில் நேற்று செங்கோட்டை காவல் ஆய்வாளர் பிரதாபன் தலைமையில் உதவி ஆய்வாளர் துரை மற்றும் போலீசார் பிரானூர் பார்டர் பகுதியில் திடீர் வாகன சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பேருந்து ஒன்றில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் மதுரை காளவாசல் பகுதியைச் சேர்ந்த சிவமணி என்பதும் அவரிடம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் 3கிலோ கஞ்சா வைத்திருப்பதும் இதனை குற்றாலம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் விற்பனை செய்ய வந்ததாக கூறினார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.