பஸ் - ஆம்புலன்ஸ் மோதி விபத்து: தந்தையின் சடலத்தை கொண்டு வந்த தாயும், மகனும் பலி
சென்னை: மாரடைப்பினால் மருத்துவமனையில் இருந்து தந்தையின் சடலத்தை ஆம்புலன்சில் கொண்டு வந்தபோது ஸ்ரீ பெரும்புதூர் அருகே தனியார் பேருந்து மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தாய், மகன், டிரைவர் ஆகிய மூவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் ரெட்டி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன், 60. பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி விஜயா,50. இவர்களது மகன் சத்தியநாராயணன், 28. மகளுக்கு திருமணமாகி விட்டது. கணவருடன் சென்னையில் வசிக்கிறார்.
சத்தியநாராயணனுக்கும் திருமணம் ஆகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். பெற்றோர் மற்றும் மனைவி, பிள்ளைகளுடன் சத்தியநாராயணன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். ராஜேந்திரனுக்கு நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த விஜயா, சத்தியநாராயணன் ஆகியோர், ராஜேந்திரனை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் ராஜேந்திரன் இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார்.
இதையடுத்து ராஜேந்திரனின் சடலத்துடன் விஜயாவும், சத்தியநாராயணனும், அதே ஆம்புலன்சில் வீட்டுக்கு இன்று நள்ளிரவு 12.15 மணியளவில் திரும்பி கொண்டிருந்தனர். ஆம்புலன்சை மதுரையை சேர்ந்த பெரியசாமி, 35 என்பவர் ஓட்டி சென்றார். இருங்காட்டுகோட்டை அருகே வந்தபோது, காட்டரம்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனி ஊழியர்களை அழைத்து வர ஒரு பேருந்து சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து கொண்டிருந்தது. ஆம்புலன்ஸ் அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதி அப்பளமாக நொறுங்கியது. இந்த விபத்தில் விஜயா, சத்தியநாராயணன், பெரியசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் ஏற்கனவே இறந்த ராஜேந்திரனின் சடலத்துடன் 3 பேரது சடலத்தையும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் வழக்கு பதிந்து தனியார் பேருந்து டிரைவரான நடராஜனை போலீசார் கைது செய்தனர்.
ஒரே குடும்பத்தில் 3 பேர் ஒரே நாளில் இறந்த சம்பவம் ஸ்ரீ பெரும்புதூரில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.