ஈரோட்டில் நிருபர்கள் எனக்கூறி ரூ.3 லட்சம் மோசடி: தம்பதி மீது அதிரடி புகார்
நிருபர்கள் எனக்கூறி தம்பதிகள் 3 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்,
ஈரோடு: அரசு நலத்திட்ட உதவிகள் பெற்று தருவதாக 3 லட்சம் ரூபாய் வசூல் செய்த வாரபத்திரிகை நிருபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரோடு எஸ்பியிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
ஈரோடு வளையகார வீதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி கிரிஜா. கணவன் மனைவி இருவரும் தாங்கள் வாரப்பத்திரிகை ஒன்றில் பணியாற்றி வருவதாகவும் தங்களுக்கு அரசு அதிகாரிகள் நெருக்கம் எனவும் அப்பகுதியினரிடம் கூறியுள்ளனர்.
மேலும் காவல்துறை அதிகாரிகளிடம் நெருக்கமாக இருக்கும் புகைபடங்களையும் காண்பித்துள்ளனர். இதனால் பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், முதியோர் உதவித்தொகை போன்ற அரசின் திட்டங்களை சுலபமாக பெற்று தருவதாக கூறி வளையகாரவீதி, கருங்கல்பாளையம், பள்ளிபாளையம் போன்ற பகுதிகளை சேர்ந்த பலரிடம் 3 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்கள் மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரோடு எஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.