டிஎன்பிஎஸ்சி தேர்வில் 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லையாம்
டிஎன்பிஎஸ்சி தேர்வில் 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. விண்ணப்பித்தவர்களில் 84 சதவீதம் பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
நில அளவையர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்காக இன்றைய தினம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதுவரை இத்தனை பேர் விண்ணப்பித்ததில்லை.
தமிழகம் முழுவதும் 6,962 தேர்வு மையங்களில் 9,351 காலி இடங்களுக்காக தேர்வு நடத்தப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மதியம் 1 மணிக்கு முடிவடைந்தது. விண்ணப்பித்த 20 லட்சம் பேரில் மொத்தம் 3 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
சென்னையில் மட்டும் 508 மையங்களில் 1.60 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வை கண்காணிக்க பறக்கும் படை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.