தூங்கி எழுந்ததும் அப்பா, அம்மா, அக்கா இறந்து கிடந்த பரிதாபம்.. அதிர்ச்சியில் 12 வயது சிறுவன்!
தொழில் நஷ்டம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
Recommended Video
திருவாரூர்: காலையில் தூங்கி எழுந்ததும், தன் அப்பா, அம்மா, அக்கா என 3 பேரும் இறந்து கிடந்த சம்பவம் 12 வயது சிறுவனை உலுக்கி போட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்துள்ளது.
முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி பகுதியில் வசித்து வந்தவர் குணசேகரன். 50 வயதான இவர், நகை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். அதாவது வீட்டிலேயே பட்டறை அமைத்து ஆர்டரின் பேரில் நகைகளை விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கு அமுதா என்ற மனைவி 45, வித்யா 18, என்ற ஒரே மகள், விஜயன் 17, அரிகரன் 12, என்ற 2 மகன்களும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக நகை தொழிலில் குணசேகரனுக்கு அதிகமாக நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் வருமானமின்றி குடும்பத்தை சரியாக நடத்த முடியாமல் குணசேகரன் தவித்து வந்துள்ளார். பெரும்பாலும் மன அழுத்தத்திலேயே நாட்களை கழித்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம்போல் குடும்பத்தார் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டு தூங்க சென்றுவிட்டனர். இன்று காலை 12 வயதான இளைய மகன் அரிகரன் தூங்கி எழுந்து குணசேகரனிடம் சென்றுள்ளான். அங்கு தனது அப்பா வாயில் நுரை தள்ளியவாறு இறந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தான். பின்னர் அம்மாவிடம் சொல்லலாம் என்று அலறி துடித்து திரும்பியபோது, மற்றொரு அதிர்ச்சி.. அதே அறையில் அம்மா அமுதாவும், அக்கா வித்யாவும் தூக்கில் மாட்டி இறந்து கிடந்தனர்.
என்ன செய்வதென்றே தெரியாமல் கதறிய சிறுவனின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் 3 பேர் இறந்து கிடந்தது பற்றி முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக வந்த அவர்கள், உடல்களை கைப்பற்றி விசாரணையை கையிலெடுத்தனர். அப்போது, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் குணசேகரன் நகை செய்ய பயன்படுத்தப்படும் சயனைடு தின்று தற்கொலை செய்திருப்பதாக தெரியவந்தது. குணசேகரன் உயிரிழந்ததை கண்டதும் அதை தாங்கி கொள்ளாத அவரது மனைவியும், மகளும், அப்போதே அதே அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் முதல்கட்டமாக தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகள் ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களையும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் சோகத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. வழக்கமாக காலையில் தூங்கி எழுந்ததும் ஆசை ஆசையாக தன் அப்பாவிடம் ஓடி செல்வானாம் அரிகரன். ஆனால் இன்று காலை அவர் இறந்து கிடந்ததையும், அதே அறையில் அம்மாவும், அக்காவும் பிணமாக தொங்கியதையும் கண்ணெதிரே கண்ட அரிகரனை யாராலும் இன்னும் தேற்றவே முடியவில்லையாம்.