5 வருடத்திற்கு முன்பு கொல்லப்பட்ட மதுரை பொட்டு சுரேஷ்.. இப்போது 3 பேர் கைது
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
மதுரை: திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகன சோதனையின் போது தப்பி ஓடிய 3 பேரை போலீசார் விரட்டி பிடித்தனர்.
மதுரை, அழகப்பன் நகரைச் சேர்ந்தவர் பொட்டு சுரேஷ். இவர் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்தார். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு நெருக்கமானவராக இருந்த இவரை கடந்த 2013 ஆம் ஆண்டு அவரது வீட்டருகில் மர்மக் கும்பல் வெட்டி படுகொலை செய்தது.
இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். அழகிரியின் மற்றொரு ஆதரவாளருமான அட்டாக் பாண்டி உள்ளிட்ட பலரை தேடிய நிலையில் மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்த சபா என்ற சபாரத்தினம், சந்தானம் ராஜூ என்ற நாகமுருகன், லிங்கம், செந்தில், சேகர், கார்த்தி ஆகிய 7 பேர் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அட்டாக் பாண்டி அரெஸ்ட்
அட்டாக் பாண்டி தலைமறைவாகவே, 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவரை பிடிக்க போலீஸார் தீவிரமாக செயல்பட்டு வந்தனர். மேலும் இவர் கைது செய்யப்பட்டால் இதில் திமுகவின் முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அட்டாக் பாண்டி, கடந்த 2015 செப்டம்பரில் மும்பையில் கைது செய்யப்பட்டார். பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அட்டாக் பாண்டி.
கொலை முயற்சி வழக்கு
மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் நண்பர் ராம்கி என்ற ராமகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கிலும் அட்டாக்பாண்டி கைது செய்யப்பட்டார். பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் 3 முறையும், ராமகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கில் இரு முறையும் அட்டாக்பாண்டியின் ஜாமீன் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியாகியுள்ளது.
ஜாமீன் கேட்ட அட்டாக்
இந்நிலையில் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் நான்காவது முறையாக ஜாமீன் கேட்டு அட்டாக்பாண்டி ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் இரண்டு ஆண்டுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறேன். உடல் நலம் சரியில்லை. இதனால் ஜாமீன் வழங்க வேண்டும் அவர் கூறியிருந்தார். இதேபோல் ராமகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
சிறையில் அட்டாக் பாண்டி
இந்த மனுக்கள் நீதிபதி பொங்கியப்பன் முன்பு ஜனவரி மாதம் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், பொட்டு சுரேஷ் கொலை, ராம்கி கொலை முயற்சி வழக்குகளில் அட்டாக் பாண்டி மூளையாக செயல்பட்டுள்ளார். அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. மதுரை நகரில் மட்டும் 13 வழக்குகள் உள்ளன. மதுரை புறநகரிலும், பிற மாவட்டங்களிலும் அட்டாக்பாண்டி மீது வழக்குகள் உள்ளன. இதனால் ஜாமீன் வழங்கக்கூடாது என்றார். இதனையடுத்து ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி பொங்கியப்பன் உத்தரவிட்டார்.
பொட்டு வழக்கில் கைது
இந்த நிலையில் பொட்டு சுரேஷ் வழக்கில் தொடர்புடைய மூவரை இன்று மதுரை போலீசார் கைது செய்தனர். வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது காரில் ஆயுதங்களுடன் நிற்காமல் சென்ற சபா ரத்தினம், நாக முருகன், சேகர் ஆகிய மூன்று பேரையும் போலீசார் விரட்டி பிடித்தனர். பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் பலர் கைது செய்யப்பட்டாலும் 5 ஆண்டுகளாக வழக்கு முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.