சொல்லாமல் கொள்ளாமல் கோவிலுக்கு வந்து பூஜை செய்த 3 அமைச்சர்கள்
உள்ளூர் அதிமுக நிர்வாகிகளுக்குக் கூட சொல்லாமல் 3 அமைச்சர்கள் ஆழ்வார்திருநகரி கோவிலில் முதல்வர் ஜெயலலிதாவுக்காக பூஜை செய்தது தூத்துக்குடி மாவட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவைகுண்டம்: உட்கட்சி பூசலால் உள்ளூரிலுள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு தகவல் எதுவும் தெரிவிக்காமல் மூன்று அமைச்சர்கள் ஆழ்வார்திருநகரி கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தியது அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் பூரண குணம்பெறவேண்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அனைத்து மதவழிபாட்டு தலங்களிலும் தொடர்ந்து சிறப்புவழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.
இதன்படி ஆன்மிக சிறப்புபெற்ற நவதிருப்பதிகளில் கடைசி ஸ்தலமும், குரு ஸ்தலமும் என்ற சிறப்பினைக்கொண்ட ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் பெருமாள் திருக்கோவிலில் நேற்று காலையில் திடீரென சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் பங்கேற்றனர். ஆனால் இதில் உள்ளூரிலுள்ள அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் யாருமே பங்கேற்கவில்லை.
கோஷ்டி மோதல்
தூத்துக்குடி மாவட்ட அதிமுகவை பொறுத்தவரை முன்னாள் அமைச்சரான சண்முகநாதன் தான் பலவருட காலமாக மாவட்ட அதிமுக செயலாளராகவே இருந்து வந்தார். இதற்கிடையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ.,வான சண்முகநாதனுக்கு மீண்டும் பால்வளத்துறை அமைச்சர் பதவி கிடைத்தது. இதனால் சண்முகநாதனே மாவட்ட செயலாளராகவும், அமைச்சராகவும் இருந்து வந்தார்.
பதவி பறிப்பு
இந்நிலையில் அமைச்சர் பதவி ஏற்ற குறிப்பிட்ட சிலநாட்களிலேயே அமைச்சர் சண்முகநாதனின் மாவட்ட செயலாளர் பதவியும், அமைச்சர் பதவியும் அதிமுக தலைமையால் திடீரென்று பறிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சரான செல்லபாண்டியன் நியமிக்கப்பட்டார். தூத்துக்குடி மாவட்ட அதிமுகவை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர்களான சண்முகநாதனும், செல்லபாண்டியனும் எதிர் எதிர் துருவங்களாக இருப்பது அனைவரும் அறிந்த சேதியாகும்.
செல்லபாண்டியன் கோஷ்டி
மீண்டும் மாவட்ட செயலாளராக செல்லபாண்டியன் நியமிக்கப்பட்டதைத்தொடர்ந்து சண்முகநாதனின் ஆதரவாளர்கள் சிலர் செல்லபாண்டியன் அணிக்கு தாவினர். இதனைத்தொடர்ந்து அணி மாறிய அவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை செல்லபாண்டியன் வழங்கினார். இந்த பட்டியலில் மாவட்டம் முழுவதும் சண்முகநாதனின் ஆதரவாளர்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டனர். இப்படியாக மாவட்ட அதிமுகவில் சண்முகநாதன் அணி, செல்லபாண்டியன் அணி என்ற இருதுருவங்கள் தலைமையில் அதிமுகவினர் செயல்பட்டு வருகின்றனர்.
போட்டி வழிபாடுகள்
இதற்கேற்ப, மாவட்டத்திலுள்ள மதவழிபாட்டு தலங்களில் மாவட்ட அதிமுக செயலாளர் செல்லபாண்டியன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாநில இளைஞர்&இளம்பெண்கள் பாசறை நிர்வாகி சின்னதுரை உள்ளிட்டவர்களை தமது கைக்குள் வைத்துக்கொண்டு சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகிறார். இதேநேரத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சண்முகநாதனின் ஆதரவாளர்கள் சண்முகநாதன் தலைமையில் அவ்வப்போது சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.
தகவல் தெரிவிக்காமல்
ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுகவின் நிகழ்வுகள் எது நடந்தாலும் சண்முகநாதனுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் முறையாக தகவல் தெரிவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், நேற்று ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் பெருமாள் கோவிலில் கடம்பூர் ராஜூ, சரோஜா, ராஜலெட்சுமி என மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது.
யாருக்கும் சொல்லவில்லை
இந்த சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட அதிமுக செயலாளர் செல்லபாண்டியனின் தீவிர விசுவாசியாக இருந்துவருவதுடன், அவரை முழுமையாக இயக்கி வரும் முக்கிய பிரமுகர் ஒருவர் தான் ஏற்பாடு செய்து ஆழ்வார்திருநகரியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரது தலைமையில் முன்னின்று நடத்தியுள்ளார். இதன் காரணமாக இந்த சிறப்புவழிபாடு குறித்து உள்ளூரிலுள்ள அதிமுக நிர்வாகிகள் யாருக்கும் மாவட்ட அதிமுக தரப்பில் எந்தவிதமான தகவலும் தெரிவிக்கவே இல்லை.
தமிழக முதல்வர் நலம்பெறவேண்டி மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற சிறப்புவழிபாடு ஆழ்வார்திருநகரி பெருமாள் கோவிலில் நடைபெற்றது குறித்து உள்ளூர் நிர்வாகிகளுக்கு தகவல் எதுவும் தெரிவிக்காதது ஆழ்வார்திருநகரி வட்டார அதிமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.