மாட்டிறைச்சி: முதல்வர் எடப்பாடி பதிலைக் கண்டித்து 3 அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு!
மாட்டிறைச்சி விவகாரத்தில் முதல்வர் எடப்பாடியின் பதிலைக் கண்டித்து அதிமுக ஆதரவு 3 எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சென்னை: மாட்டிறைச்சி விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பதிலைக் கண்டித்து அதிமுகவின் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தமிமூன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
சட்டசபையை கூட்டினால் நிச்சயம் களேபரங்கள் நடைபெறும்; ஆட்சியே கவிழும் அபாயம் உருவாகும் என தயங்கி வந்தார் முதல்வர் எடப்பாடி. ஆனால் கடும் நெருக்கடியால் வேறுவழியே இல்லாமல் சட்டசபையை கூட்டினார்.
தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத் தொடரில் நேற்று முதல் ஆடுபுலி ஆட்டத்தை தொடங்கியுள்ளது தினகரன் கோஷ்டி. தமது தொகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவில்லை என கூறி ஆளும் அரசைக் கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் வெளிநடப்பு செய்து சலசலப்பை ஏற்படுத்தினார்.
இன்று மாட்டிறைச்சி விவகாரத்தில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏக்களான தமிமூன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வெளிநடப்பு செய்தனர். மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை விவகாரத்தில் நீதிமன்றத்தின் முடிவுக்கு காத்திருக்கிறோம் என கூறினார் முதல்வர் எடப்பாடி.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பதிலைக் கண்டித்து முதலில் திமுக வெளிநடப்பு செய்தது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் தனியரசு, தமிமூன், கருணாஸ் ஆகியோர் வெளிநடப்பு செய்து பரபரப்பை கிளப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாட்டிறைச்சி தடையை தமிழக அரசு கட்டாயம் எதிர்க்க வேண்டும் என தனியரசு, கருணாஸ், தமிமூன் அன்சாரி உள்ளிட்டோர் தெரிவித்தனர்.