சென்னையில் அரும்பாக்கம் ரவுடி ராதாகிருஷ்ணன் கூட்டாளிகள் 3 பேர் கைது
சென்னை அரும்பாக்கம் ரவுடி ராதாகிருஷ்ணனின் கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த 3 ரவுடிகளை அண்ணாநகர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அரும்பாக்கத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது பூர்வீகம் மதுரை ஆகும். பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்துவிட்டார். இவர் புழல் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனின் கூட்டாளி ஆவார்.
கட்டபஞ்சாயத்து, அடிதடி, ஆள் கடத்தல், ரியல் எஸ்டேட் ஆகிய தொழிலை செய்து வருகிறார். ரவுடி பினு தொழிலில் நம்பர் 1-ஆக இருந்தபோது உடல்நிலை பாதிப்பு காரணமாக கொஞ்ச காலத்துக்கு தொழிலை மூட்டை கட்டி வைத்திருந்தார்.
அந்த நேரம் பார்த்து சிறையில் உள்ள நாகேந்திரனின் அறிவுரையை கேட்டு ராதாகிருஷ்ணன் நம்பர் 1 இடத்துக்கு வந்துவிட்டார். இவரை போட்டு தள்ளுவதற்காக திட்டம் தீட்டவே பூந்தமல்லியை அடுத்த மலையாம்பாக்கத்தில் பினு மற்றும் அவரது கூட்டாளிகள் திரண்டனர். இதுகுறித்து ரகசிய தகவல் அறிந்த போலீஸார் ரவுடிகள் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அப்போது பினு, விக்கி, கனகு ஆகியோர் தப்பி சென்றுவிட்டனர். அவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில் சென்னையில் தலைமறைவாக இருந்த ஸ்கெட்ச் அலாவுதீன், குட்டியப்பன், அப்பன்ராஜ் ஆகிய 3 ரவுடிகளை அண்ணாநகர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மூவர் மீதும் கொலை உள்ளிட்ட 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் மூவரும் அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் கூட்டாளிகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.