கீழடி உட்பட 3 இடங்களில் அருங்காட்சியகம் அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் பாண்டியராஜன்
கீழடி உட்பட 3 இடங்களில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை: தமிழகத்தில் 3 இடங்களில் அருங்காட்சியகம் இந்தாண்டு துவக்கப்படும் எனவும் அதற்காக 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, விரைவில் பணிகள் துவங்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
கீழடி அகழ்வாராய்ச்சியில் எதிர்பார்த்ததை விட ஏராளமான பொருட்கள் கிடைத்து வருகின்றன. அவை தமிழனின் தொன்மையை நிலை நிறுத்தும் வகையில் இருக்கின்றன. கடந்த 18 நாட்கள் ஆய்வில் 2,200 பொருட்கள் கிடைத்துள்ளன. தொடர்ந்து 6 மாதம் 109 ஏக்கர் பரப்பளவில் ஆய்வுகள் நடக்க உள்ளன.
கீழடியில் நடைபெறும் இந்த ஆய்வுகளில் தமிழனின் தொன்மையான பல சான்றுகள் கிடைத்து வருகின்றன. கீழடியில் தற்போது 4-வது கட்ட ஆய்வு நடைபெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்ற ஆய்வுகளில் கிடைத்த 7,700 பொருட்களில் பாதி பொருட்கள் மைசூரில் உள்ள மத்திய அரசின் அகழ்வாராய்ச்சி மையத்தில் இருக்கின்றன. மற்றவை தமிழகத்தில் இருக்கின்றன. இந்த பொருட்களை கொண்டு அருங்காட்சியகம் உருவாக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் கீழடி, கொற்கை, ஆதிச்சநல்லூர் ஆகிய 3 இடங்களில் அருங்காட்சியகம் இந்த ஆண்டு உருவாக்கப்பட உள்ளன. இதற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகளும் விரைவில் துவங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் தெரிவித்தார்.