ஒரு டுபாக்கூர் சினிமா டைரக்டர்.. நம்பி ஏமாந்து நாசமாய் போன 2 ஈரோட்டு பெண்கள்!
படவாய்ப்பு தருவதாக கூறி மோசடி செய்ததாக 3 பேர் மீது 2 பெண்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Recommended Video
ஈரோடு: சில இளம் பெண்களுக்கு ஏன்தான் இந்த சினிமா மோகம் பிடித்து ஆட்டுகிறதோ தெரியவில்லை. சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி வாழ்க்கையை நாசம் செய்யும் செய்திகளை நாள்தோறும் படிக்கிறார்களா? இல்லையா என அதுவும் தெரியவில்லை. இதில் எதுவுமே தெரியாவிட்டாலும், விளம்பரத்திற்காகவும், பணத்திற்காகவும், பரபரப்பிற்காகவும் நடிகை ஸ்ரீரெட்டி தற்போது செய்துகொண்டிருக்கும் ரகளை கூடவா தெரியாமற் போய்விட்டது இந்த இளம் பெண்களுக்கு?
தான் மனமுவந்து, சுய உணர்வுடன், தானும் உடன்பட்டு செய்த தவறுகள் எல்லாவற்றையும் தற்போது நியாயப்பட்டுத்தி கொண்டும், நீதி கேட்டு கொண்டும் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறாரே ஸ்ரீரெட்டி... அவர் கூறும் தகவல்கள் உண்மையோ, பொய்யோ.. ஆனாலும் திரைத்துறை எனும் பலருக்கு நல்வாய்ப்பு கதவை திறந்தே வைக்கும்.. சிலருக்கு அபாயத்தின் படுகுழியில் தள்ளிவிடும் என்பதுதான் உண்மை. அதற்கு உதாரணம்தான் ஈரோட்டில் 2 இளம் பெண்கள் பட்ட பாடு.
பெரிய நடிகையாக்குகிறேன்
ஈரோடு அருகே உள்ள மாமரத்துபாளையம் பகுதியை சேர்ந்தவர் கவிதா. இதேபோல, கைகாட்டிவலசு பகுதியை சேர்ந்தவர் ஓவியா. இந்த இரண்டு பெண்களின் அழகை கண்ட ஒருவர் தன் வலையில் விழ நினைத்தார். தனது பெயர் செல்வக்குமார், சென்னையில் தான் ஒரு சினிமா டைரக்டர் என்றும் 'கருப்புபூனை' என்ற ஒரு படம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். மேலும் அந்த இரு பெண்களையும் சினிமாவில் நடிக்க வைத்து பெரிய ஆளாக்குகிறேன் என்றும் சொல்லி, உடன் இருந்த 2 பேரை உதவி இயக்குநர் ஞானவேல், புரோக்கர் முத்துகுமார் என்றும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
நைசாக பணம் பறித்தனர்
சினிமா டைரக்டர் இப்படி பேச பேச சினிமா கனவில் மிதந்தனர் இரு பெண்களும். நடிகை எனும் ஆசையை தூண்டிவிட்டுக் கொண்டே சென்றனர் அந்த சினிமா பார்ட்டிகளும். கடைசியில் கவிதாவிடம் 50 ஆயிரம் ரூபாயும், ஓவியாவிடம் 25 ஆயிரம் ரூபாயும் 3 பேரும் பேசி பேசியே வாங்கியுள்ளனர். நாம்தான் லட்சம் லட்சமாக சம்பாதிக்க போகிறோமே என்ற நினைப்பில் அந்த பெண்களும் இந்த பணத்தை பெரிதாக நினைக்கவில்லை. இருவரையும் சென்னைக்கு கூட்டி வந்தார் டைரக்டர். சினி இன்ஸ்ட்டியூட்டில் பதிவு செய்து அதற்கான ரசீதுகளை பெற்று தந்தார். அவ்வளவுதான். இரு பெண்களும் அந்த டைரக்டரை முழுமையாக நம்ப தொடங்கினர்.
படவாய்ப்பு ஒன்றையும் காணோம்
இப்போது டுபாக்கூர் டைரக்டர் தன் வேலையை காட்ட துவங்கினார். தவறான பாதைகளுக்கு இரு பெண்களையும் அழைத்து சென்றார். நடிக்கும் வாய்ப்பு கிடைக்க போகிறது என்பதற்காக அனைத்தையும் இழந்தனர் அவர்களும். இறுதியில் பார்த்தால், பட வாய்ப்புகள் ஒன்றையுமே காணோம், மாறாக தாங்கள்தான் எல்லாவற்றையும் இழந்து உடல்ரீதியாக பாதிக்கப்பட்டு வருகிறோம் என்பதை உணர்ந்து திருந்தினர். வீடு திரும்பி குடும்பத்தாரிடம் சொல்லி அழுதனர்.
சுற்றிவளைத்து தர்மஅடி
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கொண்டையன்காட்டு வலசு பகுதியில் கோமாதா பூஜை நடத்த அந்த டைரக்டர் அண்டு கோ வருவதாக கவிதாவுக்கும் ஓவியாவுக்கும் தகவல் கிடைத்தது. இதுதான் சந்தர்ப்பம் என்று தங்கள் உறவினர்களுடன் அங்கு சென்றனர். டைரக்டர், உதவி டைரக்டர் ஞானவேல், புரோக்கர் முத்துக்குமாரை ஒட்டுமொத்தமாக அனைவரும் சுற்றி வளைத்து தர்மஅடி கொடுத்தனர். ஆத்திரம் தீரும் அடித்த அந்த பெண்களும், காஞ்சிகோயில் காவல்நிலையத்தில் அவர்களை ஒப்படைத்தனர். தங்களை மோசம், செய்து நாசம் செய்தது குறித்து இரு பெண்களும் புகார்கள் அளித்தனர்.
நிஜங்களை தேடுங்கள்
இளம் பெண்களே.. உலகம் நன்மைகளால் மட்டும் நிரம்பியிருக்கவில்லை. தீமைகளும் சரிக்கு சரியாகவே இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் தீமைகளுக்கு ஆதரவுக்கரங்கள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. சினிமா மோகத்திலிருந்த தயவுசெய்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். போலிகளைக் கண்டு ஏமாறாமல் - நகல்களை நம்பி மோசம் போகாமல் - நிஜங்களை தேடும் பயணத்தை இனியாவது துவங்குங்கள்!