திருப்பரங்குன்றத்தில் சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி.. தூங்கி கொண்டிருந்தபோது உடல் சிதறிய பரிதாபம்
சிலிண்டர் வெடித்து விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
Recommended Video
மதுரை : சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் அடுத்து உள்ளது பாலாஜி நகர் பகுதி. இங்கு வசித்து வருபவர் ராமமூர்த்தி. பிஸ்கர் மற்றும் மிட்டாய் வியாபாரம் செய்து வந்தவர். சமீப காலமாக இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நிறைய இடத்தில் கடனை வாங்கி அதனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார் ராமமூர்த்தி.
குடும்ப தகராறு
அதிக கடன் தொல்லை காரணமாக குடிப்பழக்கத்திற்கும் ஆளாகியுள்ளார். குடிப்பழக்கம் குடும்பத்தில் தகராறை ஏற்படுத்தியது. குடித்துவிட்டு வருவதால் கணவன்-மனைவியிடையே தினமும் பிரச்சனை இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இதனால் கடன், மற்றும் குடும்பத்தில் பிரச்சனைகள் என எல்லா வகையிலும் ஒன்றுசேர்ந்ததால், ராமமூர்த்தி கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
தற்கொலை முடிவு
அதனால் யாரிடமும் சரிவர பேசாமலும் இருந்து வந்த அவர், குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். நேற்றிரவு 2 மணியளவில், தனது மனைவி காஞ்சனா, 6 வயது மகள் அக்ஷயா தூங்கி கொண்டிருந்த அறையில் சிலிண்டரை கொண்டு வந்து வைத்து, அதனை திறந்துவிட்டதுடன் தீயையும் பற்றவைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெடித்து சிதறிய உடல்கள்
சிலிண்டர் டமார் என பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் பக்கத்திலிருந்து மற்றொரு சிலிண்டரும் வெடித்து சிதறியது. இந்த இரண்டு சிலிண்டர்கள் வெடித்ததில், தூங்கிக் கொண்டிருந்த ராமமூர்த்தியின் மனைவி, காஞ்சாவும் அவர்களது 6 வயது பெண் அட்ஷயாவும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
3 பேர் உயிரிழப்பு
ராமமூர்த்தி படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். சத்தத்தை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே ராமமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.