விவேக் வீட்டில் கள்ளத் துப்பாக்கிகள் எதுவும் பறிமுதல் செய்யவில்லை: வருமான வரித்துறை
விவேக் வீட்டு சோதனையில் கள்ளத் துப்பாக்கிகள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என வருமான வரி புலனாய்வு பிரிவு தலைமை இயக்குநர் முரளிகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயா டிவி நிர்வாகியும் இளவரசியின் மகனுமான ஜெயா டிவி விவேக் வீட்டு சோதனையில் கள்ளத் துப்பாக்கிகள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என வருமான வரி புலனாய்வு பிரிவு தலைமை இயக்குநர் முரளிகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஜெயா டிவி மற்றும் ஜாஸ் சினிமாஸை நிர்வகித்து வரும் விவேக் வீட்டில் 5 நாட்களாக வருமான வரி சோதனை நடைபெற்றது. இச்சோதனையில் ஏராளமான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
விவேக் நடத்தி வந்த 50 போலி நிறுவனங்கள் குறித்த ஆவணங்களும் சிக்கின. இவற்றின் மூலமாகவே கருப்புப் பண பரிமாற்றம் நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன் விவேக்கின் 100-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. இதையடுத்து விவேக்கை நேற்று வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று 4 மணிநேரம் கிடுக்குப் பிடி விசாரணை நடத்தி பின்னர் விடுவித்தனர் வருமான வரித்துறை அதிகாரிகள்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விவேக், தமது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் கேட்டதாகவும் அதற்கு விளக்கம் அளித்திருக்கிறேன் என்றும் கூறினார். மேலும் திருமணத்தின் போது மனைவிக்கு போடப்பட்ட நகைகள் குறித்தும் அதிகாரிகள் கேட்டதாகவும் விவேக் கூறியிருந்தார்.
இதனிடையே விவேக் வீட்டில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் 3 துப்பாக்கிகளையும் கைப்பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஒன்று உரிமம் பெறாத கள்ளத் துப்பாக்கி எனவும் கூறப்பட்டன. ஆனால் வருமான வரி புலனாய்வுப் பிரிவு தலைமை இயக்குநர் முரளிகுமார், விவேக் வீட்டில் இருந்து கள்ளத் துப்பாக்கிகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.