கோகுல்ராஜ் கொலை வழக்கு- தேடப்படும் குற்றவாளியான யுவராஜைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
சேலம்: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் தலித் இளைஞரான கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் தீரன் சின்னமலை பேரவை தலைவ யுவராஜை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். திருச்செங்கோட்டிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்த இவர், கடந்த ஜூன் மாதம் பள்ளிப் பாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். காதல் விவகாரத்தால் அவர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. விசாரணையில், சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த யுவராஜ் உள்ளிட்ட சிலருக்கு கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்தது.
இந்த வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் மீது கடத்தல், கொலை, வன்கொடுமை ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 மாதமாக யுவராஜ் தலைமறைவாக உள்ளார். இதையடுத்து யுவராஜ் உள்பட ஒன்பது பேர் மீது திருச்செங்கோடு நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜ் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாட்ஸப் மூலம், தனக்கும் தற்கொலை செய்துகொண்ட டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவுக்கும் இடையே நடந்த போன் உரையாடல் ஆடியோவினை வெளியிட்டு அவர் தற்கொலையில் உள்ள சந்தேகங்கள் குறித்தும் பேசியுள்ளார்.
அவர் பேசியதாக வெளியான வாட்ஸப் ஆடியோவில், "இந்தக் கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியான பிறகு, வழக்கு திசை மாறியதால் நான் தலைமறைவாகிவிட்டேன்.பிறகு சில நாள்களில் கோவை நீதிமன்றத்தில் சரணடையத் திட்டமிட்டு இருந்தேன். இதற்கான ஏற்பாடுகளையும் செய்து இருந்தேன். ஆனால், அரூரில் 2 பேரை கைது செய்தவுடன், சரணடையும் முடிவை மாற்றிக் கொண்டேன்" என யுவராஜ் கூறியுள்ளார்.
இதையடுத்து இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள யுவராஜை பிடிக்க, சி.பி.சி.ஐ.டி போலீசார் 3 தனிப்படைகளை அமைத்துள்ளனர். ஈரோடு, திருச்செங்கோடு, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.