விவசாயியை தாக்கிய 3 காவலர்கள் தற்காலிக இடமாற்றம்- ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் உத்தரவு
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் டிராக்டருக்கு வாங்கிய கடனை கட்டத் தவறிய விவசாயியை போலீசார் அடித்து இழுத்து சென்ற விவகாரத்தில் 3 போலீசார் தற்காலிக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் சோழகன் குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பாலன், இவர் கோட்டக் மகேந்திரா வங்கியில் கடன் பெற்று டிராக்டர் வாங்கியிருக்கிறார். தவணைத் தொகைகட்டாததால் வங்கி, உயர்நீதிமன்றத்தில் வண்டியை கைப்பற்ற உத்தரவு பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் கடந்த 6ம் தேதி, மகேந்திரா ஃபைனான்ஸ் நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினர், பாலனிடம் இருந்த டிராக்டரை ஜப்தி செய்ய சென்றிருக்கின்றனர். அதற்கு பாலன், இன்னும் 64 ஆயிரம் ரூபாய்தான் கட்ட வேண்டி இருக்கிறது. அறுவடை முடிந்த உடன் அதை நான் கட்டி விடுகிறேன். டிராக்டரை ஜப்தி செய்ய வேண்டாம் எனக் கூறியிருக்கிறார்.
பாலனின் பேச்சை ஏற்றுக்கொள்ளாத மகேந்திரா ஃபைனான்ஸ் நிர்வாகிகளும், போலீசாரும் பாலனை டிராக்டரில் இருந்து இழுத்து கீழே இழுத்துபோட்டு கடுமையாக தாக்கினர். மேலும், விவசாயி பாலனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, அங்கு வைத்தும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனிடையே விவசாயி தாக்கப்பட்டது தொடர்பாக 4 வாரத்தில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தலைமைச் செயலாளர், டிஜிபி விளக்கம் தர வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, பாலனை தாக்கிய விவகாரத்தில் 3 காவல்துறையினரை மத்திய மண்டல ஐ.ஜி செந்தாமரைக் கண்ணன் தற்காலிக பணியிடமாற்றம் செய்துள்ளார். மேலும் இவ்விவகாரத்தில் முழு விசாரணைக்கு பின்னர் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐ.ஜி செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.